சன்டே ஸ்பெஷல்.. ரயிலில் வந்திறங்கும் கெட்டுப்போன ஆட்டுக்கறி.. விலை குறைவு.. அதிகாரிகள் பகீர் தகவல்
சென்னை: வடமாநிலத்தில் இருந்து கெட்டுப்போன ஆட்டிறைச்சிகள் ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டு விலை குறைவாக விற்கப்பட்டு வருவதாகவும், ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவுகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் ஹோட்டலுக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபகாலமாக அசைவுப் பிரியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களை தொட்டாலே இன்னைக்கு ஒருபுடி, சன்டே சமையல், இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்று பல்வேறு வகையிலான அசைவ உணவுகள் சமைப்பதும், சாப்பிடுவதும் தான் டிரெண்டிங்கில் உள்ளது. ஒருபக்கம் அசைவ உணவின் மீதான ஆர்வம் அதிகரித்தாலும், ஹோட்டல்களில் பறிமுதல் செய்யப்படும் கெட்டுப்போன இறைச்சிகள் சமயத்தில் கிலியை ஏற்படுத்தி விடுகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் சதீஷ்குமார் கூறியதாவது: வடமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சி கொண்டு வரப்பட்டு வருவது குறித்து தகவல் கிடைத்த நிலையில், அதனை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஆட்டிறைச்சி கிலோ 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெளிமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகள் ஒரு சில பகுதிகளில் 500 முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைவான இந்த இறைச்சியால் இரட்டை லாபம் கிடைக்கும் என்பதால் இறைச்சிக் கடைக்காரர்களும் ரயில் மூலமாக பாதுகாப்பற்ற முறையில் இறைச்சியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆட்டிறைச்சி கெட்டுப்போகாமல் இருப்பதற்காக இறைச்சியின் மேல் கெமிக்கலை பயன்படுத்தாமல், கறியை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளின் மீது ரசாயனத்தை ஊற்றி ஆட்டிறைச்சியுடன் சேர்த்து பார்சல் செய்கின்றனர்.
இதனால், நீண்ட நேரம் இறைச்சி கெட்டுப்போகாமல் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் வாந்தி, பேதி, வாய்ப் புண், வயிற்று எரிச்சல், ஒவ்வாமை, தலை சுத்துவது போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். அதே மாதிரி நாம் சாப்பிடும் உணவில் கெமிக்கல் உள்ளதா என்பதை கண்டறிவதும் ரொம்ப கடினம்.
எனவே, சமைப்பதற்கு முன்பே இறைச்சியுடைய தன்மையை வைத்து கெமிக்கல் கலந்துள்ளதைத் தெரிந்துகொண்டு அந்தக் கறியை தவிர்த்துவிடலாம். இது போன்ற கெட்டுப்போன இறைச்சிகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்குதான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த ஆட்டிறைச்சிகளை யார் அனுப்புகின்றனர். யார் இங்கு வாங்குகின்றனர் போன்ற தகவல்கள் தெரிவதில்லை. கெட்டுப்போன உணவுகள் ஹோட்டல்களில் வழங்குவதைக் கண்டறியப்பட்டால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு முறையான விளக்கம் கேட்கப்படும். விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சீல் வைத்து, லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications