துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு? எடப்பாடி, நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
சென்னை: கோவை செம்மொழி பூங்காவில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு எடுத்து செல்லப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 15 ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேரு இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சியில் குப்பை மற்றும் ஹோட்டல் கழிவுகளை அள்ளும் வாகனத்தில் உணவு பொட்டலங்கள் கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. திமுக அரசு தூய்மை பணியாளர்களை இழிவுப்படுத்துவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர். இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவுபடுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு அனுப்பப்பட்டதாகக் கூறி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த திமுக அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது. மனிதாபிமானமற்ற இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கழிப்பறையில் கூட காசு பார்த்து கொள்ளையடிக்கும் திமுக தலைவர்களை ராஜமரியாதையுடன் நடத்தும் உங்கள் அரசுக்கு, நமது நாட்டைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் என்ன சிக்கல்? எங்களுக்கு உணவளியுங்கள் என்று தூய்மைப் பணியாளர்கள் கேட்டார்களா?
எதற்காக 'சோறு போடுகிறோம்' என்ற போர்வையில் அவர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கிறீர்கள்? விளிம்பு நிலை மக்கள் மீது திமுகவுக்கு உள்ள வெறுப்பு இந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போகும் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை. திமுக அரசின் அகம்பாவப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் வரும் தேர்தலில் வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ளத் தயாராகுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications