தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறை.. தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ரவி!
சென்னை: தமிழக சட்டசபை இன்று கூடிய நிலையில், கேரளாவில் நடந்ததை போலவே தமிழக ஆளுநர் ரவியும் முழுமையாகத் தனது உரையை வாசிக்கவில்லை. அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்
அதன்படி நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் அம்மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஒரு போதல் போக்கே இருந்து வந்தது. கடந்த மாதம் அங்குச் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து போது அதில் ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பாடுகள் பேசுபொருள் ஆனது.

ஆண்டின் முதலில் கூட்டப்படும் சட்டசபை கூட்டத்தொடர் வழக்கமாக ஆளுநர் உரையுடன் தான் தொடங்கும். அதன்படி அங்கே சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பித்த போது ஆளுநர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான உரையைக் கேரள அரசு தயார் செய்து அனுப்பி இருந்தது. இருப்பினும், ஆளுநர் ஆரிப் கான் கேரள அரசு தயார் செய்து தந்த உரையை முழுமையாக வாசிக்க மறுத்துவிட்டார். ஆளுநர் உரையின் கடைசிப் பத்தியை மட்டும் வாசித்து, இரண்டே நிமிடங்களில் ஆளுநர் உரையை முடித்துக் கொண்டார்.
அன்றைய தினம் அனைவரையும் வரவேற்பதாகத் தனது உரையை ஆரம்பித்த ஆளுநர் ஆரிப் கான் 61 பக்க உரையில் நேரடியாகக் கடைசி பக்கத்திற்கு சென்றார். அதில் இருக்கும் கடைசி ஒரு பாராவை மட்டும் வாசித்துவிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார். தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில், அவர் அவையில் இருந்து வெளியேறினார். சரியாக 9 மணிக்கு அவைக்கு வந்த கேரள சட்டசபைக்கு வந்த அவர் 9.04 மணிக்கு அவையில் இருந்து வெளியேறிவிட்டார்.
கேரள வரலாற்றில் ஆளுநரின் மிகக் குறுகிய கொள்கை உரை இதுவாகும். இப்போது கிட்டதட்ட அதேபோன்ற ஒரு சம்பவம் தான் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது. இன்று தமிழக சட்டசபை கூடிய நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியும் தனது முழு உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்..
தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி உரையை முழுவதும் புறக்கணித்தார் ஆளுநர் ரவி. மேலும், தமிழக அரசு தனக்குத் தயார் செய்து தந்த உரையில் கூறப்பட்ட சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறி உரையை முடித்துக்கொண்டார். வெறும் சில நிமிடங்களில் ஆளுநர் தனது உரையை முடித்துக் கொண்டார்.
கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications