இந்தியாவின் வரலாற்றில் முதல் முறை.. நீதிபதிக்கு எதிராக கெஜ்ரிவால் எடுத்த மிகப்பெரிய முடிவு
டெல்லி: ஒரு வழக்காடி, ஒரு நீதிபதியையும் அவரது நீதிமன்றத்தையும் பகிரங்கமாகப் புறக்கணிப்பது இதுவே முதல் முறை? டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வரண காந்தா சர்மாவுக்கு எழுதிய கடிதத்தில், தற்போதைய சிபிஐ விடுவிப்பு வழக்கில் தான் பங்கேற்கப்போவதில்லை என்பது மட்டுமல்லாமல், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா ஆகியோர் சம்பந்தப்பட்ட எதிர்கால வழக்குகள் எதிலும் தான் ஆஜராகப்போவதில்லை என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். இதை அவர் ஒரு 'சத்தியாகிரகம்' என்று வர்ணிப்பதுடன், தனது இந்த நிலைப்பாட்டின் காரணமாக ஏற்படக்கூடிய எத்தகைய விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சிபிஐ தொடர்ந்துள்ள மதுபானக் கொள்கை வழக்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவின் அமர்வில் நிலுவையில் உள்ள மேல்நடவடிக்கைகளில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த நீதிபதிக்கே கடிதம் எழுதியிப்பது நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகளில் நேர்மை இருக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், காந்திய சத்தியாகிரகக் கொள்கைகளை இதற்கு உதாரணமாகக் காட்டியுள்ளார்.

நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா எழுதிய விரிவான கடிதத்தில் கெஜ்ரிவால், "மிகுந்த பணிவுடனும், நீதித்துறையின் மீதுள்ள முழு மரியாதையுடனும்" இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனால், இந்த நீதிமன்றத்தின் முன்னால் நடக்கும் நடவடிக்கைகள், 'நீதி வழங்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், அது வழங்கப்படுவது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்' என்ற அடிப்படைத் தத்துவத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்று நான் கருதுகிறேன். இந்த நடவடிக்கை கோபத்தினாலோ அல்லது அவமரியாதை செய்யும் நோக்கத்திலோ எடுக்கப்படவில்லை , நீதித்துறை செயல்பாட்டின் நடுநிலைமை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே எடுத்துள்ளேன். எனது இந்த முடிவினால் ஏற்படக்கூடிய சட்ட ரீதியான எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
நீதிமன்றத்தில் உங்கள் அமர்வில் நடைபெற உள்ள மேல்நடவடிக்கைகளில் நான் இனி பங்கேற்க மாட்டேன். இவ்வாறு செய்வதன் மூலம் எனது சட்டப்பூர்வ நலன்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன். அந்த விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். காந்திய சத்தியாகிரகத்தின் ஒவ்வொரு மனசாட்சிப்பூர்வமான செயலும் சுமக்க வேண்டிய சுமை அது, எனது மனசாட்சிக்கு இதனை தவிர வேறு கண்ணியமான வழி இல்லை" என்று கூறியுள்ளார்.
முன்னதாக மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுக்களை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரித்து வருகிறார்.
முன்னதாக, நீதிபதி சர்மா இந்த வழக்கில் இருந்து விலகக் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு நிவாரணம் வழங்க மறுத்து நீதிபதி பிறப்பித்த முந்தைய உத்தரவுகள், ஆர்.எஸ்.எஸ்-உடன் தொடர்புடைய 'அதிவக்தா பரிஷத்' நிகழ்ச்சிகளில் நீதிபதி பங்கேற்றது, சொலிசிட்டர் ஜெனரலின் கீழ் மத்திய அரசு வழக்கறிஞர்களாக நீதிபதியின் பிள்ளைகள் நியமிக்கப்பட்டது போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, நீதிபதி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்புள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அச்சம் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான வாதத்தை கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி முன்வைத்தார். ஆனால் கடந்த வாரம், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சர்மா கெஜ்ரிவாலின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, வழக்கை தானே விசாரிப்பதாக முடிவெடுத்தார்.
இந்நிலையில் கெஜ்ரிவால், தனது மனுவை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பயன்படுத்தப்பட்ட மொழி, தனது கோரிக்கை நீதிபதி மற்றும் நீதித்துறை மீதான தனிப்பட்டத் தாக்குதலாகப் பார்க்கப்பட்டதைக் காட்டுவதாகவும், இதனால் தமக்கு நடுநிலையான விசாரணை கிடைக்கும் என்று நம்புவது சாத்தியமில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு வழக்காடி தனக்கு எதிரான உத்தரவை ஏற்றுக்கொண்டாலும், அந்த வழக்காடி நீதிபதி 'கறைபடிந்தவர்' என்று நிரூபிக்க முயன்றார் அல்லது 'அரசியல்வாதியான வழக்காடி நீதிமன்றத்தை அச்சுறுத்த முயன்றார்' என்று பொருள்படும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வது கடினம் என்றும் கெஜ்ரிவால் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் நீதிபதியின் இரண்டு பிள்ளைகளும் அரசு வழக்கறிஞர்களாகப் பட்டியலில் உள்ளனர். சொலிசிட்டர் ஜெனரலிடமிருந்து வழக்கு ஒதுக்கீடுகளைப் பெறுகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், 2023 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் நீதிபதியின் மகனுக்கு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாது. இவ்வளவு அதிகமான ஒதுக்கீடுகள் கணிசமான தொழில்முறை வருமானமாக மாறும் என்றும் கெஜ்ரிவால் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"மிகவும் வெளிப்படையான முரண்பாடுகள் நிறைந்த இந்த நடவடிக்கைகளில், எல்லாம் சரியாக இருப்பது போலக் கருதி பங்கேற்று என்னால் மனசாந்தியடைய முடியாது. அவ்வாறு செய்வது எனது மனசாட்சிக்கு இழைக்கும் துரோகம், நீதித்துறையின் கண்ணியத்திற்குச் செய்யும் அவமரியாதை மற்றும் அதிகாரத்தின் அத்துமீறலுக்கு எதிராக நீதிமன்றங்களே இறுதிப் புகலிடம் என்று இன்னும் நம்பும் இந்திய மக்களுக்குச் செய்யும் அநீதி," என்று கெஜ்ரிவால் கடிதத்தில் கூறியுள்ளார்.
விசாரணையில் இருந்து விலகும் தனது முடிவு, மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் போதனைகளால் ஈர்க்கப்பட்டது என்று கெஜ்ரிவால் கூறினார். ஒரு பெரும் நீதிப்பிழையாகத் தான் கருதுவதை மறுபரிசீலனை செய்து சரிசெய்ய அதிகார அமைப்பிற்கு வாய்ப்பளித்த பிறகு, மேற்கொண்டு இந்த விசாரணையில் பங்கேற்க தனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்த முடிவு சட்ட ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று நன்கு தெரியும் என்ற கெஜ்ரிவால், இந்த நடவடிக்கை நீதித்துறையைச் சிறுமைப்படுத்துவதற்காக அல்லாமல், அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கான "மனசாட்சிப்பூர்வமான செயல்" என்று அவர் விவரித்துள்ளார்
தான் ஆஜராக மறுப்பது இந்த குறிப்பிட்ட வழக்கும், இத்தகைய அச்சங்கள் எழும் எதிர்கால விசாரணைகளுக்கும் மட்டுமே பொருந்தும் என்று கெஜ்ரிவால் தெளிவுபடுத்தி உள்ளார். மத்திய அரசு, பாரதிய ஜனதா கட்சி அல்லது ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றுடன் தொடர்பில்லாத மற்ற விவகாரங்களில் நீதிபதி முன்னிலையில் தொடர்ந்து ஆஜராகப்போவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
"எனது எதிர்ப்பு உயர் நீதிமன்றம் என்ற அமைப்புக்கோ அல்லது ஒட்டுமொத்த நீதித்துறைக்கோ எதிரானது அல்ல. மாறாக, உங்கள் நடுநிலைமை குறித்துக் கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த வழக்கை நீங்கள் தொடர்ந்து விசாரிப்பதற்கு மட்டுமே எனது எதிர்ப்பு," என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications