ரஜினி கூட செய்யாதது.. "சினிமாவுக்கு இதுதான் நல்லது.." கமல் ஹாசன் செய்த "தக் லைப்" சம்பவம்
சென்னை: கோலிவுட்டில் எப்போதுமே பல புதுமைகளைக் கொண்டு வருபவர் கமல்ஹாசன். அவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து தக் லைப் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கிடையே இந்த படத்தில் மற்றொரு புதுமையைக் கமல் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் கூட செய்யாத புதுமையைக் கமல் செய்து காட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எப்போதுமே புதுமைகளை முயல்பவர் கமல்.. முதலில் ஆவிட் சாப்ட்வேர் பயன்படுத்தி எடிட்டிங் (மகாநதி), பிளிம் ரோலை தவிர்த்து டிஜிட்டலில் முதல் படம் (மும்பை எக்ஸ்பிரஸ்) எனத் தமிழ் சினிமாவுக்கு பல புதுமைகளைக் கொண்டு வந்து, அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் செல்பவர் கமல் ஹாசன்.

கமல்ஹாசன்
இப்போது வரும் படங்களில் கூட இரட்டை கதாபாத்திரங்கள் ஒரே ஸ்கிரீனில் வரும்போது கிராபிக்ஸ் சரியாக இருக்காது. ஆனால், கடந்த 2008ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தில் 10 கேரக்டர்களில் நடித்து அசத்தி இருப்பார். அதில் பல காட்சிகளில் ஒரே நேரத்தில் 3, 4 கமல் வருவது போலக் கூட இருக்கும். ஆனால், அது அவ்வளவு பக்காவாக இருக்கும்.
இதற்கிடையே தமிழ் சினாவில் கமல் மற்றொரு புதுமையைச் செய்யப்போகிறார். இது தமிழ் சினிமாவுக்கே மிக பெரிய மாற்றத்தைத் தரலாம் எனப் பலரும் பாராட்டுகிறார்கள். அதாவது தமிழ் சினிமாவில் இப்போது வெளியாகும் அனைத்து படங்களுமே 4 வாரங்களில் ஓடிடி தளங்களில் வந்துவிடுகிறது. ரிலீஸ் ஆகி இப்படி ஒரே மாதத்தில் ஓடிடியில் வந்துவிடுவதால் மக்கள் தியேட்டருக்கு செல்வது குறைந்தது.
தியேட்டர்கள் கோரிக்கை
பெரிய படங்களைத் தவிர மற்ற படங்களுக்கு ஆடியன்ஸ் வருவது வெகுவாக குறைந்தது. வெகு சில சிறிய மற்றும் மிடியம் பட்ஜெட் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ஹிட் ஆனது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் 4 வாரங்களுக்குப் பதிலாக 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் படங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூட பல முறை கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோல 4 வார ரிலீஸ் இருப்பதால் வட இந்தியாவில் எந்தவொரு தமிழ்ப் படத்தையும் பெரிதாக ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. ஏனென்றால் 8 வார ஓடிடி ரிலீஸ் விண்டோ இல்லை என்றால் வட இந்தியாவில் திரையிட மாட்டோம் என நாட்டின் மிகப் பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் அறிவித்திருந்தது. இதன் காரணமாகவே ரஜினி, விஜய் படங்கள் கூட வட இந்தியாவில் பெரிய கலெக்ஷன் எடுக்கவில்லை.
8 வாரங்கள்
இருப்பினும், 8 வாரங்கள் கழித்து ரிலீஸ் செய்தால் ஓடிடி நிறுவனங்கள் தாங்கள் கேட்கும் ரேட்டை குறைத்துவிடுவார்கள் என்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் 8 வார ஓடிடி கேப்பிற்கு தயங்கினார்கள். இந்தச் சூழலில் கமல் ஹாசன் தனது தக் லைப் படத்திற்குத் துணிச்சலாக 8 வார ஓடிடி ரிலீஸ் விண்டோவை தேர்வு செய்துள்ளார். அதாவது படம் ஜூன் 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நிலையில், 8 வாரங்கள் கழித்தே அது ஓடிடியில் வெளியாகும். இந்த 8 வார ரிலீஸால் வட இந்தியாவிலும் தக் லைப் படம் மிகப் பெரியளவில் பல்வேறு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.
கமல் எடுத்த முடிவு
கொரோனாவுக்கு பிறகு எந்தவொரு தமிழ் படமும் இதுபோல 8 வாரக் கேப்பை தேர்வு செய்தது இல்லை. சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இதை கமல்ஹாசன் உறுதி செய்தார். இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது சோதனை முயற்சி எல்லாம் இல்லை.. இதுதான் நடைமுறைக்குச் சாத்தியமானது. அனைத்து தரப்பினரும் உட்கார்ந்து பேசி முடிவெடுத்தோம். இந்த 8 வாரம் என்பது தொடக்கம் முதலே எங்கள் திட்டமாக இருந்தது" என்றார்.
ரஜினி, விஜய் போன்றவர்களின் படங்கள் கூட 4 வாரங்களில் ரிலீஸ் ஆகும் நிலையே இருந்தது. அதை உலக நாயகன் கமல்ஹாசன் மாற்றியிருக்கிறார். ஓடிடியில் வர 8 வாரங்கள் ஆகும் என்பதால் மக்கள் தியேட்டர்களில் பெரிய திரையிலேயே படம் விரும்புவார்கள். இதன் மூலம் கலெக்ஷன் அதிகரிக்கும் என்பதே இதன் அடிப்படை.












Click it and Unblock the Notifications