அதிமுக ஆட்சி மரபை மாற்றிய ஸ்டாலின்:10 வருடத்தில் முதல் முறை.. கேள்வி நேரத்தில் பதில் சொன்ன முதல்வர்
சென்னை: கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக, தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் முதல்வர் பதில் அளித்துள்ளார். இதன் மூலம், உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த பத்து வருடங்களாக அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் கேள்வி வரம்புக்குள் கொண்டு வரப்படாத நிலை இருந்து வந்தது. அந்த நிலைமை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் பலரும் கேட்டுக் கொண்டதால் பழையபடி முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேர வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

முதல்வரிடம் முக்கிய துறைகள்
எந்த ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும், காவல்துறை, உளவுத்துறை போன்ற மிக முக்கியமான துறைகளை தங்கள் வசம் வைத்திருப்பார்கள். பிற துறைகளை பிறருக்கு பகிர்ந்து கொடுப்பது வழக்கம். தமிழகத்தை பொறுத்தவரையும் கூட, இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. கருணாநிதி அல்லது ஜெயலலிதா என யார் முதல்வராக இருந்த போதிலும், உளவுத்துறை மற்றும் காவல்துறை அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி வகித்தபோது, காவல்துறை மட்டுமல்ல, பொதுப்பணித்துறையும் அவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் முதல்வரின் துறைகள் தொடர்பாக கேள்வி நேரத்தின்போது கடந்த 10 ஆண்டுகளாக கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு தரப்படாமல் இருந்து வந்தது. திமுக ஆட்சி வந்த நிலையில் இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கேள்வி நேரம்
அதே நேரம் கொரோனா நோய் பரவல் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் என்பது எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்தது. முதல் முறையாக இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெற்றுள்ளது. இதில் முதல்வர் தன்வசம் வைத்துள்ள காவல்துறை சார்ந்து கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

பதில் அளித்த ஸ்டாலின்
கேள்வி நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க தமிழக அரசு முன்வருமா என்ற ஒரு கேள்வியை முன் வைத்தார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும்.
மேலும் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications