பல் மருத்துவர் டூ அமைச்சர்.. விஜய் கேபினட்டில் 8-வது இடம் பிடித்த காரைக்குடி பிரபு.. யார் இவர்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் அரசு இன்று பதவியேற்றுள்ள நிலையில், முதல்வராக விஜய்யும் அவருடன் சேர்ந்து 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த கேபினட்டில் காரைக்குடி எம்.எல்.ஏ பிரபுவுக்கும் இடம் கிடைத்துள்ளது. பல் மருத்துவராக இருந்து தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ள இந்த டி.கே பிரபு யார்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவரது கேபினட்டில் பிரபுவும் இடம் பெற்றுள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை டெபாசிட் இழக்க வைத்த பிரபு யார்? அவரது பின்னணி பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பல் மருத்துவர் பிரபு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் டிகே பிரபு (வயது 41). பல் மருத்துவரான பிரபு, மருத்துவத் துறையில் உயர்கல்வி பெற்றவர். அடிப்படையிலேயே அரசியல் ஆர்வம் கொண்ட பிரபு, தவெகவை விஜய் தொடங்கிய பிறகு அவரது கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு சமூக பணிகளை செய்த பிரபு கட்சியில் இணைந்த பிறகு தொடர்ச்சியாக மேலும் சமூக பணிகளை செய்து வந்து பிரபலம் பெற்றார்.
இவரது தந்தை துரை கருணாநிதி அவர்களும் காரைக்குடி பகுதியில் நற்பெயர் கொண்டவர். நீண்டகாலமாகப் பல் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். காரைக்குடியில் இவரது மருத்துவ சேவை மக்களிடையே இவருக்கு ஒரு நல்ல நற்பெயரைப் கொடுத்தது. இது போக விஜய்யின் மாநாடுகள் நடக்கும் போது தவெக சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி, முதலுதவி சிகிச்சைகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை இவரே கவனித்து வந்தார்.
ரீல்ஸ் டாக்டர் என கலாய்க்கப்பட்டார்
தற்போது நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் இவரது சொந்த தொகுதியான காரைக்குடியில் போட்டியிட்டார். இது டாக்டர் பிரபுவின் அரசியல் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை பிரபுவுக்கு கொடுத்துள்ளது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏவான மாங்குடி மற்றும் சீமான் ஆகிய வலுவான வேட்பாளர்களை எதிர்த்து களம் கண்டார். சீமான் போட்டியிட்டதால் இந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றது. தமிழகத்தில் பெரிதும் கவனிக்கப்பட்ட இந்த தொகுதியில் 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.
ஜெர்மனி, லண்டனில் மருத்துவம் படித்த பிரபு ஆரம்பத்தில் ரீல்ஸ் டாக்டர் என பயங்கரமாக கலாய்க்கப்பட்டார். ஏனெனில் இவரது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் இல்லாத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு படு பிசியாக பதிவிட்டார். மக்கள் நலத்திட்டங்களை செய்து அதனை ரீல்ஸ்களாக பதிவேற்றி வந்தார். இதற்காக விமர்சனங்களையும் சந்தித்தார்.
படித்த, பண்பானவராக..
விஜய்யின் அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ள டி.கே பிரபு, படித்த மற்றும் பண்பானவராக அறியப்படுகிறார். எதிர்க்கட்சிகளை கூறை கூறாமல் நாகரிகமாக திட்டங்களை சொல்லி வாக்கு கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவர் விஜய்யின் அமைச்சரவையில் முக்கியப் பங்காற்றுவார் என்றே பலராலும் கூறப்படுகிறது. தன் சொந்த தொகுதியான காரைக்குடி மக்களுக்கு தொகுதி வளர்ச்சி, கல்வி, மருத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் முதல் நோக்கம் என தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரபு கூறியிருந்தார்.














Click it and Unblock the Notifications