ஃபாரின் நாய்க்கு தான் மவுசு.. சென்னையில் அதிகமாக லாப்ரடார் ரெட்ரீவர்.. பரிதாபத்தில் நாட்டின நாய்கள்!
சென்னை: தமிழகத்தில் குறிப்பாக தலைநகரான சென்னையில் பொது மக்களை நாய்கள் கடுமையாக தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் அவற்றுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. இந்த நிலையில் உரிமம் பெற விண்ணப்பித்த விபரங்களின் அடிப்படையில் சென்னையில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வகை நாய்கள் வளர்க்கப்படுவது தெரியவந்துள்ளது. முதல் இடத்தில் 'லாப்ரடர் ரெட்ரீவர்' இன நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுவது தெரிய வந்துள்ளது.
ஒரு காலத்தில் ஓநாய்கள், நரிகள் போல காட்டு விலங்காக இருந்த நாய்கள் மனிதருடன் ஏற்பட்ட தொடர்பால் வீட்டு விலங்குகளாக மாறிவிட்டன. விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்ட ஆதிகால மனிதர்கள் நாய்களை அவற்றின் பாதுகாவலர்களாக நியமித்தனர்.

காலப்போக்கில் தான் ஒரு காட்டு விலங்கு என்பதை மறந்து சமூக விலங்காகவே நாய்கள் மாறின. தொடர்ந்து பல்கி பெருகிய அவை தற்போது தெரு நாய்களாகவும் ஆகிவிட்டன. அதே நேரத்தில் நாய்கள் பொதுமக்களை கொடூரமாக தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சென்னை நாய் உரிமம்
மேலும் வளர்ப்பு நாய்களும் பொது மக்களை கடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியது. இதை அடுத்து நாய்கள் வளர்ப்பவர்கள் உரிமம் பெற வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதை அடுத்து சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 66,000 பேர் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்த விபரங்களின் அடிப்படையில் மக்கள் அதிகம் வாங்கும் மற்றும் வளர்க்கும் நாய்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.
லாப்ரடார் ரெட்ரீவர்
அதிக அளவில் வெளிநாட்டு இன நாய்கள் சென்னையில் வளர்க்கப்படுவதும், அவற்றின் விலை பத்தாயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. தற்போது சென்னையில் மொத்தம் 66,081 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெற்ற நாய்களில், எந்த நாய் இனத்தை மக்கள் அதிகம் வளர்க்கிறார்கள் என்ற விவரமும் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லாப்ரடோர் ரெட்ரீவர்' என்ற நாய் இனம் முதலிடம் பெற்றுள்ளது. இது கனடாவில் தோன்றிய நாய் இனம். மீனவர்கள் தங்களுக்கு உதவியாக இதை வளர்த்து வந்தனர். புத்திசாலித்தனம், விசுவாசம் மற்றும் விளையாட்டுத்தனம் காரணமாக, இந்த நாய் இனத்தை உலகம் முழுவதும் பலர் விரும்பி வளர்க்கிறார்கள்.
பொமேரியன்'
அடுத்ததாக, திபெத்தில் தோன்றிய 'ஷிஹ் சூ' நாய் இனம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. நீண்ட முடியும் அமைதியான குணமும் இதன் சிறப்பு. அனைவருக்கும் பரிச்சயம் ஆன 'பொமேரியன்' மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்கொட்லாந்தை பூர்வீகமாக கொண்ட 'கோல்டன் ரெட்ரீவர்' நான்காவது இடத்திலும், 'ஜெர்மன் ஷெப்பர்டு' ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
நாட்டின நாய்கள்
பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட 'பீகில்' ஆறாவது இடத்தில் இருக்கிறது. சீனாவில் தோன்றிய 'பக்' நாய் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 'இந்தியன் ஸ்பிட்ஸ்' எட்டாவது இடத்திலும், சைபீரியாவை சேர்ந்ததாக கருதப்படும் 'ஸ்பிட்ஸ்' ஒன்பதாவது இடத்திலும், திபெத்தின் 'லாசா ஆப்சோ' பத்தாவது இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டின் சொந்த நாய் இனங்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 'சிப்பிப்பாறை' 11வது இடத்தில் உள்ளது. தேனியில் இருந்து தோன்றிய 'கோம்பை' 15வது இடத்திலும், ராஜபாளையம் வகை நாய்கள் 18வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications