இரண்டு உயிர்களை பறித்த தெய்வானை! யானைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிக்க உடனே இதை செய்யுங்க
சென்னை: திருச்செந்தூரில் கோயில் யானை தெய்வானை மிதித்து பாகன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் யானைகளிடமிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து வனத்துறையினர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இந்தியாவில் யானை மதங்களுடன் தொடர்புடைய ஓர் உயிரினமாக பார்க்கப்படுகிறது. எனவே முக்கிய கோயில்களில் அவை வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில நேரங்களில் யானைகள் மூலம் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. அப்படித்தான் திருச்செந்தூர் கோயிலிலும் நடந்திருக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை எனும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. 26 வயதான இந்த யானை இயல்பாகவே குஷியான யானையாக இருந்து வந்திருக்கிறது.

தெய்வானைக்கு ராதாகிருஷ்ணன், உதயகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பாகன்களாக இருக்கின்றனர். சம்பவம் நடந்த நவ.18ம் தேதி மதியம் ராதாகிருஷ்ணன் உணவுக்காக வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து இரண்டாவது பாகன் உதயகுமாரும் அவரது உறவினர் சிசுபாலனும் யானை குடிலுக்கு வந்திருக்கிறார்கள். சிசுபாலன் யானையிடம் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அப்போது யானையின் தும்பிக்கையில் முத்தமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதில் மிரண்ட தெய்வானை யானை சிசுபாலனை தனது தும்பிக்கையால் சுற்றி வளைத்து கழுத்தை இறுக்கியுள்ளது.
அவரை காப்பாற்ற சென்ற உதயகுமாரையும் தள்ளிவிட்டிருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே சிசுபாலன் உயிரிழந்துவிட்டார். பாகன் உதயகுமார் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்துவிட்டார். இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது திருச்செந்தூர் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் யானைகள் பற்றி தவறன தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
யானைகள் இயல்பில் கூட்டமாக வாழும் பண்புடையவை. இதை தனியே அடைத்து வைப்பதன் மூலம் அதன் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இங்கிருந்துதான் வளர்ப்பு யானைகளின் நடவடிக்கைகளில் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இதனால் அது எப்போது சாந்தமாக இருக்கும், எப்போது ஆக்ரோஷமாக இருக்கும் என்பது தெரியாது. எனவே யானைகளிடம் சிக்கிக்கொண்டால் தப்பிக்க முதலில் ஓட வேண்டும்.
ஓடும் பாதையில் ஏதேனும் சரிவான இடம் இருந்தால் அந்த இடத்தை நோக்கி ஓட வேண்டும். ஏனெனில் யானைகளின் உடல் எடையில் 60% அதன் முன் பகுதியில் இருக்கிறது. இதனால் சரியான இடத்தில் யானையால் சீராக ஓட முடியாது. தடுமாறி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, துரத்துவதை விட்டுவிடும். நாமும் உயிர் பிழைத்துக்கொள்ளலாம்.
இரண்டாவது விஷயம் நேர் கோட்டில் ஓடாமல் வளைந்து வளைந்து ஓட வேண்டும். காரணம், யானைக்கு பார்வை திறன் குறைவு. 30-50 அடி தூரத்தில் உள்ளது மட்டுமே அதன் கண்களுக்கு தெளிவாக தெரியும். வளைந்து ஓடுவதன் மூலம் யானையின் பார்வையிலிருந்து எளிதாக விலகிவிட முடியும். மட்டுமல்லாது ஓடும்போது யானைகளால் சட்டென திரும்ப முடியாது.
மூன்றாவது விஷயம் யானை துரத்தினால் நாம் தோளில் போட்டிருக்கும் துண்டை தூக்கி தூரமா வீச வேண்டும். யானை அந்த துண்டை மிதிக்க தொடங்கிவிடும். எனவே நமக்கு சற்று டைம் கிடைக்கும், எஸ்கேப் ஆகிவிடலாம்.
ஆனால் இவை அனைத்தும் எல்லா நேரங்களிலும் கை கொடுக்குமா? என்பது புறச்சூழலை பொறுத்துதான் தெரியும். எனவே, முடிந்தவரை யானைக்கு அருகில் செல்வதை தவிருங்கள் என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications