மாமல்லபுரத்தில் கிளி ஜோதிடம் பார்த்த 7 பேரை விரட்டி பிடித்த வனத்துறை அதிகாரிகள்.. அபராதம் விதிப்பு
செங்கல்பட்டு: மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கிளி ஜோசியம் பார்த்து வந்த 7 பேரை விரட்டி பிடித்த வனத்துறை அதிகாரிகள், அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, கிளிகளையும் விடுவித்தனர்.
ஒவ்வொரு மனிதனுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தை அறுவடை செய்யும் வகையில், மக்களின் தேவை என்ன என்று ஜோசியர்கள் எல்லாரும் புரிந்து வைத்துக் கொள்வர். அதன் காரணமாகவே தினமும் காலை அனைத்து சேனல்களிலும் ஜோதிட நிபுணர்கள் ராசி பலன்களை பற்றி அலசுகின்றனர்.
செங்கல்பட்டில் அரசு பஸ்-லாரி மோதி பயங்கர விபத்து.. 6 பேர் பலியான சோகம்.. பிரதமர் மோடி இரங்கல்
இந்த ஜோசியங்கள் பலிக்குமா என்பதெல்லாம் கடந்து, தனது கருத்துக்கு ஆதரவாக ஒருவர் பதில் கூற வேண்டும் என்பதற்காகவே ஜோசியம் பார்ப்பவர்களும் உண்டு. இதில் கிளிகளை கொண்டு பார்க்கப்படும் கிளி ஜோசியம் மிகவும் பிரபலம். இதற்காகவே பச்சைக் கிளிகளுக்கு சில நேரங்களில் அதிக கிராக்கி ஏற்படும். இதனால் பச்சைக் கிளிகளை பிடிக்க வேண்டும் என்று சிலர் முயற்சிப்பர்.
கிளிகளுக்காக புகார்
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்து ரதம் மற்றும் கோவளம் கடற்கரை ஆகிய பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில் இருந்து பிடித்து வரப்பட்ட பச்சைக் கிளிகள் பறந்து செல்லாமல் இருக்க, அதன் இறக்கைகளை வெட்டி கூண்டுகளில் அடைத்து கிளி ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வனத்துறை ஆய்வு
இதையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் ப.கல்யாண் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒரு வாகனத்தில் வந்து, மாமல்லபுரத்தில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரம் அமர்ந்து பச்சைக் கிளிகளை கூண்டில் அடைத்து சுற்றுலா பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்டு வந்த கிளி ஜோசியக்காரர்களை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
7 பேருக்கு அபராதம்
தொடர்ந்து வனத்துறையினரை பார்த்த கிளி ஜோசியக்காரர்கள், கிளி கூண்டுடன் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை மடக்கி பிடித்து திருப்போரூர் வனத்துறை அலுவலகத்திற்கு வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து கிளி ஜோசியக்காரர்கள் சுப்பிரமணியன், தங்கமாரி, வள்ளிநாயகம், மாரியப்பன், முப்புடாதி, குமார், பரமசிவன் ஆகிய 7 பேர் மீதும் வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிளிகள் விடுவிப்பு
தென் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் மாமல்லபுரத்தில் வீடு வாடகை எடுத்து வசித்து வருவது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கிளி ஜோசியக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கூண்டு கிளிகளை வனத்துறை அதிகாரிகள் இள்ளலூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.