மோசடி பத்திரங்கள்.. பதிவுத்துறையில் மாற்றம்.. பத்திரத்தை ரத்து செய்யலாமா? சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை ரத்து செய்வது தொடர்பாக சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
மோசடி பத்திரம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளரை ஏமாற்றி சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரபதிவு செய்தால் அதுதான் மோசடி பத்திரம் ஆகும்.

மோசடி பத்திரம்: போலியாக ஒரு உரிமை ஆவணத்தை உருவாக்கி, அந்த போலி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரமும் மோசடி பத்திரமாகும். போலியாக பட்டா தயாரித்தால், அதுவும் மோசடி பத்திரம் என்றே கருதப்படும்.
இப்படி ஆள்மாறாட்டம், மோசடி காரணங்களுக்காகவே, கடந்த 2021ல், தமிழக அரசு பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை செய்திருந்தது.. இந்த திருத்தங்கள், 2022 ஆகஸ்ட், 16ல் அமலுக்கு கொண்டுவரப்பட்டன.. அதன்படி, மோசடி புகார் குறித்து விசாரித்து, மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இந்த விபரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும் என்பதே அந்த திருத்தமாகும்.
திடீர் ரத்து: மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், மோசடி பத்திரங்கள் தொடர்பாக, 11,100 புகார்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மோசடி பத்திரங்களை ரத்து செய்யும் சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்துவது குறித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், கடந்த வருடம் தடை விதித்திருந்தது. எனவே, மோசடி பத்திர புகார்கள் மீதான விசாரணையை நிறுத்த பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 2023 அக்டோபரில் உத்தரவிட்டார்.
விசாரணை: அந்த உத்தரவில், "இந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணையில் உள்ளது. இதில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மோசடி பத்திரங்கள் ரத்து தொடர்பான புகார்கள் மீதான விசாரணை உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். இறுதி முடிவு வரும் வரை, இந்த மனுக்களை விசாரிக்க வேண்டாம்.. 2022 ஆகஸ்ட் 16க்கு முன் மற்றும் பின் பதிவான அனைத்து பத்திரங்களுக்கும் இது பொருந்தும்" என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மோசடி பத்திரங்கள் தொடர்பான வேறு ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிப்ரவரி 12ல் பிறப்பித்த உத்தரவில், மோசடி பத்திரங்கள் மீது மாவட்ட பதிவாளர்கள் விசாரணை மேற்கொள்ள தடையில்லை என்று தெரிவித்திருக்கிறது.
வழிகாட்டுதல்கள்: இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "மோசடி பத்திரங்கள் வழக்கில், ஹைகோர்ட் உத்தரவுபடி, புகார்களை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தடை எதுவும் இல்லை. ஆனால், இதன்படி, மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் நிர்வாக ரீதியான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களுக்காக மாவட்ட பதிவாளர்கள், புகார்தாரர்கள் காத்திருக்கின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications