மோசடி பத்திரங்கள்.. நில விற்பனையை விடுங்க.. மோசடி பத்திரம் ரத்து செய்வதில் பதிவுத்துறை புதிய உத்தரவு
சென்னை: மோசடி பத்திரங்கள் தொடர்பான புதிய உத்தரவு ஒன்றினை பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ளார்.. என்ன அது?
மோசடி பத்திரம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளரை ஏமாற்றி சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரபதிவு செய்தால் அதுதான் மோசடி பத்திரம் ஆகும்.
போலியாக ஒரு உரிமை ஆவணத்தை உருவாக்கி, அந்த போலி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரமும் மோசடி பத்திரமாகும். போலியாக பட்டா தயாரித்தால், அதுவும் மோசடி பத்திரம் என்றே கருதப்படும்.

ஆள்மாறாட்டம்: இப்படி ஆள்மாறாட்டம், மோசடி காரணங்களுக்காகவே, கடந்த 2021ல், தமிழக அரசு பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை செய்திருந்தது.. இந்த திருத்தங்கள், 2022 ஆகஸ்ட், 16ல் அமலுக்கு கொண்டுவரப்பட்டன.. அதன்படி, மோசடி புகார் குறித்து விசாரித்து, மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இந்த விபரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும் என்பதே அந்த திருத்தமாகும்.
புகார்கள்: இப்படிப்பட்ட சூழலில், பழைய நடைமுறைகளை சுட்டிக்காட்டி, மோசடி பத்திரங்களை ரத்து செய்ய கோரும் மனுக்களை, மாவட்ட பதிவாளர்கள் சிலர் தள்ளுபடி செய்துவிடுகிறார்களாம். இப்படியொரு புகார் சமீபத்தில் முளைத்திருந்தது. மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், மோசடி பத்திரங்கள் தொடர்பாக, 1,100 புகார்களை ரத்து செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இந்நிலையில், சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்வதை நிறுத்தி வைக்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவில் உள்ளதாவது:
தலைமை வழக்கறிஞர்: "மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்காக, பதிவு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, 77A என்ற பிரிவை, முன் தேதியிட்டு அமல்படுத்தலாமா என்பது உள்ளிட்ட சில கேள்விகள், உயர்நீதிமன்ற மதுரை கிளை எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக, அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணையில் உள்ளது. இதில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மோசடி பத்திர புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
மோசடி பத்திரங்கள்: அதன் அடிப்படையில், மோசடி பத்திரங்கள் ரத்து தொடர்பான புகார்கள் மீதான விசாரணை உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். உயர்நீதிமன்றத்தில் இறுதி முடிவு வரும் வரை, இந்த மனுக்களை விசாரிக்க வேண்டாம்.. 2022 ஆகஸ்ட் 16க்கு முன் மற்றும் பின் பதிவான அனைத்து பத்திரங்களுக்கும் இது பொருந்தும்" என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications