கருணாநிதியை விடவும் ஸ்டாலின் ஒரு படி மேலே.. அடங்க மாட்டோம்.. சி.வி.சண்முகம் அட்டாக்
சென்னை : கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒருபடி மேலாக சென்று ஸ்டாலின் நடந்து கொள்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றபோது, அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுகவினரை ரெய்டு மூலம் திமுக அரசு மிரட்ட நினைக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில அரசாங்கம் இல்லை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து உள்ளார்களா? என்றும் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

ரெய்டில் விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஜயபாஸ்கர் உடன் தொடர்பில் இருந்த மருத்துவர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.

வாக்குவாதம்
இந்நிலையில் அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதால், அவர் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சி.வி.சண்முகம், "அரசியல் காழ்ப்புணர்ச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த ஆவணத்தையும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகளை இவர்கள் மீது போட்டு சோதனை என்ற பெயரிலேயே இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி ஒழிக்கலாம் என்று நினைக்கிறது.

அப்பாவை விட ஒரு படி மேலே
ஆளத் தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் முக.ஸ்டாலின். அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒருபடி மேலே சென்று இவர் நடந்து கொள்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்களை வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என்று இந்த அரசு தப்புக் கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு திறமை இல்லாத ஸ்டாலின் அரசு, மக்களை திசை திருப்புவதற்காகவே இது போன்ற சோதனைகளை நடத்துகிறது.

மக்கள் விரோத நடவடிக்கை
திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களிலேயே அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. 105 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்க மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்தது எடப்பாடி அரசு. ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் மக்களை மீண்டும் இந்த அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பால் விலை, கட்டுமானப் பொருள், சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சேர்த்தார்களா?
சுகாதாரத்துறை அமைச்சர் மீது வழக்கு போட வேண்டிய அவசியம் என்ன? ஒரு மருத்துவ கல்லூரிக்கு முறையாக அங்கீகாரம் கொடுக்கவில்லை என்கிறார்கள். மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில அரசாங்கம் இல்லை. வெறும் தடையில்லா சான்று மட்டும் தான் மாநில அரசாங்கம் கொடுக்கும். மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா தான் ஆய்வு செய்து முறையான அனுமதி கொடுக்கும். மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து உள்ளார்களா?" என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications