தேதி குறிச்சாச்சு..செங்கோட்டையனுக்கு தவெகவில் வெயிட்டான பதவி.. விஜய்யுடன் சந்திப்பு
சென்னை: தமிழ்நாடு அரசியல் கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் சீட் பிடிக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அதிமுகவில் பல சீனியர் நிர்வாகிகள் திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகிறார்கள. அந்த வகையில் கொங்கு மண்டல அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை மறுநாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக அவர் விஜய்யை சந்தித்து உரையாட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அடுத்த 3 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்போதிருந்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தற்போதைய நிலையில், நான்கு முனை போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் தொடரும் அதிருப்தி
ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். நாம் தமிழர் தனித்து போட்டியிடுகிறது. நடிகர் விஜய்யின் தவெகவும் தங்கள் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல அதிருப்தியாக உள்ள பல தலைவர்கள் கட்சி மாறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் அதிருப்தியில் இருந்த அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்துவிட்டனர். அதிமுகவில் மேலும் சில முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து திமுக இயங்கி வருகிறது.
தவெகவில் செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் ஏற்பட்டு கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். அந்த வரிசையில் அதிமுக கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவராக இருந்து, சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் ஏற்கனவே பாஜகவுடன் தொடர்பில் இருந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருக்கு அங்கு சரியான பதில் வரவில்லை. அதனால் அவர் தவெக பக்கம் டாப் கியர் போட்டு நகர்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய்யை சந்தித்து பேசும் செங்கோட்டையன், தவெகவில் இணைந்து சட்டமன்ற தேர்தல் பணியாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் சந்திப்பு
இதுகுறித்து செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி வருகிற நவம்பர் 30 ஆம் தேதி கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக எடப்பாடிக்கு செக் வைக்க செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் ஏற்கனவே சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு மிகவும் ஆரோக்கியமாக முடிந்துள்ளது.இது தொடர்பாக விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை நடத்தியுள்ளார்.
முக்கிய பதவி
செங்கோட்டையனின் நெருங்கிய உறவினர் ஒருவரும் விஜய் யை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் செங்கோட்டையன் - விஜய் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதன்பிறகு நாளை மறுநாள் (நவம்பர் 27 ஆம் தேதி) செங்கோட்டையன் தவெகவில் இணையும் நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர் என்பதால் அவருக்கு தவெகவில் முக்கிய பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளது." என்றனர்.












Click it and Unblock the Notifications