"இவருமா?".. திமுக பக்கம் சாய்கிறாரா "மாஜி".. ஸ்டாலினை புகழ்ந்து ட்வீட் போட்டு.. குழப்பத்தில் அதிமுக
முன்னாள் அதிமுக எம்பி மைத்ரேயன் ஸ்டாலினை பாராட்டி உள்ளார்
சென்னை: அதிமுகவின் மாஜி ஒருவர், முதல்வர் ஸ்டாலினை மனதார பாராட்டி உள்ளார்.. அவரது செயல்பாடுகள், அறிவிப்புகள் குறித்து ட்வீட் போட்டு பாராட்டிய இந்த சம்பவம்தான், அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பி விட்டுள்ளது..!
பதவியேற்றதில் இருந்தே திமுக அரசு பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில், அதுவும் மிகவும் நெருக்கடியான நேரத்தில், முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டாலின், என்ன செய்ய போகிறாரோ? எப்படி மக்களை காக்க போகிறாரோ? என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளிடம் எழுந்தன.

பாராட்டு
இதனால் அதிமுகவின் சில முன்னாள் அமைச்சர்களே திக்குமுக்காடி போயுள்ளனர்.. மனமுவந்து பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.. அதிலும் ஓபிஎஸ், கணக்கே இல்லாமல் திமுக அரசை பாராட்டி வருகிறார்.. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது டாக்டர் ராமதாஸ்தான்.. அந்த வகையில், தற்போது அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயனும் ஸ்டாலினை பாராட்டி உள்ளார்.

தொற்று பரவல்
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மூடப்பட்டு உள்ளது... இதனால் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் எதுவும் வழங்கப்படாமல் உள்ளது.. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

உதவித்தொகை
இதையடுத்து, திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோயில் ஊழியருக்கும் ரூ.4,000/ உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்குதான், முன்னாள் அதிமுக எம்பி மைத்ரேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.. இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டும் போட்டுள்ளார்..

முதல்வர்
"திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்-பட்டாச்சாரியார்கள்-பூசாரிகள்,பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu அவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அபிமானி
மைத்ரேயனின் இந்த பாராட்டு அதிமுக்கியத்துவம் பெற்று வருகிறது.. இதற்கு காரணம் மைத்ரேயனை பொறுத்தவரை, ஒரு பக்கா பாஜகவின் அபிமானி... அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர்... ஜெயலலிதாவுடன் நல்ல புரிந்துணர்வு தொடர்பு வைத்திருந்தவர்... தனிப்பட்ட முறையில் இவர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா, அதனால்தான் 2 முறை எம்பி வாய்ப்பு தந்தார்... இதனால் பாஜக-அதிமுக கூட்டணிக்கு இடையே ஒரு பாலமாகவும் செயல்பட்டார் மைத்ரேயன்.

பாஜக
ஆனால், இவர் என்னதான் அதிமுகவில் இருந்தாலும் பாஜகவின் பிம்பம் என்பதே பதிந்து போயுள்ளது.. இதற்கு பிறகு அதிமுகவில் முக்கியத்துவம் தரப்படாத நிலையில், எம்பி சீட்டும் தராத நிலையில், ராஜ்ய சபா சீட்டுக்கும் பரிந்துரைக்காத நிலையில், கடுமையான அதிருப்தியில் மைத்ரேயன் இருந்து வந்தார்..

என்ன காரணம்?
தன்னை அதிமுகவில் புறக்கணிக்கப்படுவதாகவும், நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் மைத்ரேயன் வருத்தப்பட்டதாகவும் செய்திகளும் கசிந்தன. இப்படிப்பட்ட சூழலில், அதிமுக சம்பந்தமாக எந்த பேச்சும் எடுக்காத நிலையில், திடீரென திமுக அரசை மைத்ரேயன் பாராட்டி உள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறது..!












Click it and Unblock the Notifications