கழுவிய அமைச்சர்.. நழுவிய செங்கோட்டையன்! கோட்டையில் நடந்த பேச்சுவார்த்தை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியுமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. எடப்பாடி உடன் பிணக்கு ஏற்பட்டதிலிருந்து செங்கோட்டையனை தொடர்பு கொண்டு பேசி வந்த ஒரு அமைச்சர், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையிலேயே மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தொகுதிக்கு தேவையான சில விஷயங்களை கேட்டு பெற்றுவிட்டு கடைசியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாராம். இதனால் செங்கோட்டையனுக்காக தலைமையிடம் பேசிய அந்த அமைச்சர் தற்போது தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டு இருக்கிறார் செங்கோட்டையன். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்ற போது எம்எல்ஏ ஆனவர், அதற்குப் பிறகு 1991 ஜெயலலிதா முதல்வரான போதும் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
அதிமுகவின் மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைத்தவர், ஜெயலலிதாவின் பயணத்திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர், கொங்கு மண்டலத்தில் வலுவான அரசியல்வாதி என பல சிறப்புகள் செங்கோட்டையனுக்கு உண்டு.

செங்கோட்டையன் தவெக
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்குப் பிறகு தனக்கான முக்கியத்துவம் குறைந்ததால் மிகுந்த அதிருப்தியில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடிக்கு எதிராக போர் கொடி தூக்கினார். அதற்கு பிறகு சமாதான முயற்சிகள் நடைபெற்ற நிலையில், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என மீண்டும் ஒரு குரல் எழுப்பினர். இதை அடுத்து முதலில் செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளும், பிறகு அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைய இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தான் செங்கோட்டையனை திமுகவில் இணைய வைக்க சென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் நீண்ட காலமாக பேசி வந்த நிலையில் 'கழுவுற மீனில் நழுவுற மீன்' கதையாக செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கோபியிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் தனது இல்லத்தில் தங்கி இருந்தார்.
திமுக அமைச்சர் பேச்சு
அவர் வந்திருப்பதை அறிந்த திமுகவின் முக்கிய அமைச்சர் தனது தனி காரில் சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறார். பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் அமைச்சர் வெளியே கிளம்பிய போது வெளியே ஊடகத்தினர் உள்ளதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறார். இதை அடுத்துதான் செங்கோட்டையன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு செல்வது போல செல்ல, அவரை பின்தொடர்ந்து ஊடகங்கள் சென்று விட்டதால், அமைச்சர் தனது காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.
சட்டமன்றத்தில் பேச்சுவார்த்தை
ஏற்கனவே அதிமுகவிலிருந்து சில முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு தாவ வைத்த அந்த அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதை அறிந்து எப்படியாவது. அவரை திமுகவில் இணைய வைக்க வேண்டும் என கடும் முயற்சி செய்திருக்கிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு வந்த போதும் அங்கு அவரை மூன்று முறை சந்தித்து பேசி பல சலுகைகள் அளிப்பதாக சொன்னாராம். வரமாட்டேன், வருவேன் என எதையுமே சொல்லாமல் யோசிக்கிறேன் என சொல்லியே தன் தொகுதிக்கு தேவையான சில விஷயங்களை அந்த அமைச்சர் மூலம் செங்கோட்டையன் சாதித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
கட்சி தாவல் விவகாரம்
திமுகவுக்கு வந்தால் மாவட்ட செயலாளர் பதவி, வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, அமைச்சர் பதவி தரப்படும் எனச் சொல்லியும், ஏற்கனவே லோக்கலில் முத்துச்சாமி இருக்கிறார் என நினைக்க வேண்டாம், அவரை விட பெரிய பதவி தரப்படும் என பலமுறை பேசி பார்த்தாராம். ஆனால் திமுகவில் பத்தோடு பதினொன்றாக இருப்பதை விட விஜய் இடம் சென்றால், இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கலாம். வரும் காலங்களிலும் தனக்கு நிறைய ஆபர்கள் கிடைக்கும் என கருதியே செங்கோட்டையன் விஜய் தரப்புக்கு தாவி விட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே தலைமையிடம் எப்படியும் செங்கோட்டையனை கொண்டு வந்து விடுவேன் என சத்தியம் செய்யாத குறையாக பேசி அமைச்சர் தற்போது சிக்கலில் தவிக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications