உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு!
சென்னை: உசிலம்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ஐயப்பன் மீண்டும் போட்டியியிடுகிறார். சசிகலா முன்னிலையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இன்று அவர் இணைந்துள்ளார். இதையடுத்து உசிலம்பட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஐயப்பன்.
திருமங்கலத்தைச் சேர்ந்த பி அய்யப்பன், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக உசிலம்பட்டி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். 2022 ஆம் ஆண்டு முதல் ஓபிஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அய்யப்பன், தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓபிஎஸ்ஸுடன் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தது திமுக தலைமை. அய்யப்பனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்தார் ஐயப்பன். இந்நிலையில், மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பிலும், முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் தலைமையில், அக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அய்யப்பன், "எனக்கு உசிலம்பட்டி தொகுதியில் சீட் வழங்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டால் தேர்தல் பணி முழுவதும் எனது ஆதரவாளர்களை கொண்டு செய்து வெற்றிவாகை சூடுவோம். ஓ. பன்னீர்செல்வம் தனக்கு மட்டும் சீட்டு வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். ஒரு கேப்டனாக தொண்டனை கரை சேர்க்க தவறிவிட்டார் ஓபிஎஸ். திமுகவில் நானும் இணைந்தபோது எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக ஓபிஎஸ் உறுதி அளித்த நிலையில், அதிலிருந்து அவர் வாக்கு தவறிவிட்டார்" எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், இன்று சசிகலாவை சந்தித்து அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் அய்யப்பன். இதையடுத்து, சசிகலா கட்சி சார்பில் உசிலம்பட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஐயப்பன்.












Click it and Unblock the Notifications