தங்க நிறத்துக்குத் தான் தமிழ்நாட்ட.. தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நடிகை ரோஜா? அவரே சொல்லிட்டாரே!
சென்னை: நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக மாநிலத்தில் பிரபலமாக வலம் வந்த அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது சொந்த தொகுதியான நகரியில் படுதோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணைவதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.
1990களில் தமிழகம் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நிலையில், பின்னர் சின்னத்திரை வெள்ளித்திரைகளில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக டெல்லியில் அவரது போராட்டம் பலரையும் கவனிக்க வைத்தது.
மேலும் அவருக்கு நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வெற்றியும் பெற்றார். ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு முக்கிய துறை ஒதுக்கப்படலாம் எனவும் அல்லது அவர் துணை முதல் அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியான நிலையில் அப்போது ரோஜாவுக்கு அமைச்சர் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜா பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளான போதிலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். ஜெகன் மோகன் ரெட்டி உடன் அவர் மோதல் போக்கை கடைபிடிக்காமல் சுமுகமாகவே நடந்து கொண்ட நிலையில், இரண்டு ஆண்டுக்குப் பிறகு ஆந்திர மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அப்போது இருந்து மிகவும் பிசியான அரசியல்வாதியாக இருந்தாலும் அவ்வப்போது தமிழகம் வந்து ஊடகங்களை சந்தித்து பேசி வந்தார். இந்த நிலையில் தான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகளின்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து நிலையில், தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
குறிப்பாக ஜெகன்மோகன் ரெட்டியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் தேர்தலில் மண்ணைக் கவ்வினர். குறிப்பாக சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த ரோஜா தான் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற நகரி தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். ரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்ட பானு பிரகாஷ் என்பவர் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெரு வெற்றி பெற்றார். தனது சொந்த தொகுதியில் கட்சித் தலைவர்கள் தனக்கு எதிராக வேலை செய்ததாக ரோஜா புகார் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் தொகுதிக்குள் வரவில்லை, மக்களை சந்திக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் ரோஜா மீது வைக்கப்பட்டது அவரது தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை ரோஜா விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மருமகள் என தன்னை கூறிவரும் ரோஜா தமிழக அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரோஜா மட்டுமல்லாது மேலும் சில நடிகர் நடிகைகள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், வேறு கட்சிகளில் இருக்கும் பிரபலங்கள் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள இருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக வரும் தகவல் உண்மை இல்லை என ரோஜாவே விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்,"தமிழக வெற்றி கழகத்தில் தான் இணைய போவதாக ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பொய் பிரச்சாரம் செய்கிறது ஏன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும்.. விஜய்யுடன் அவ்வளவாக எனக்கு பழக்கம் இல்லை.. நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கிய போது கூட நான் சேரவில்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தான் நான் இருப்பேன்.. வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை.. விஜய் கட்சியில் சேர வேண்டும் என்ற அவசியமும் இல்லை" என விளக்கம் அளித்திருக்கிறார் .இதன் மூலம் நடிகை ரோஜா தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்ற வதந்திக்கு அவராலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications