கைது செய்யப்பட்டார் கேஜிஎஃப் விக்கி.. ஊழியரை குடோனுக்குள் 2 நாட்கள் அடைத்து தாக்கிய வழக்கில் ஆக்ஷன்
சென்னை: "ராஜா பகவத் மாதிரி" என்ற டயலாக்கால் பிரபலமான ஜவுளிக்கடை ஓனரும், பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகியுமான கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் எனப்படும் விக்கி. இவர், வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் என்.என் கார்டன் பகுதியில் கேஜிஎஃப் என்ற பெயரில் துணிக்கடையை நடத்தி வருகிறார். இவர், சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

தனது துணிக்கடையில் கீழே அமர்ந்துகொண்டு, இங்க எனக்கு இருக்குற சவுரியமே வேற.. நான் காட்டுறேன் வாட்டத்த.. சும்மா ராஜா பகவத் மாதிரி என கேஜிஎஃப் விக்கி பேசிய வசனம் இணைய உலகில் மிக பிரபலமானது. இந்நிலையில் கேஜிஎப் விக்கி எனும் விக்னேஷ் தற்போது கைதாகி காவல் நிலையத்தில் உள்ளார்.
வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர் ரூ. 1 லட்சம் கையாடல் செய்து தலைமறைவாகி, மீண்டும் தன்னிடம் வேலைக்கு வந்தபோது கேஜிஎஃப் விக்கி அவரை ஷோரூம் குடோனில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து, அடியாள் வைத்து இரும்பு ராடால் தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த அந்த ஊழியர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய விக்கியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் விக்கி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
கேஜிஎஃப் விக்கி ஏற்கனவே பெண் அளித்த புகாரிலும், குழந்தை தொழிலாளர்களை கடையில் வேலைக்கு வைத்த புகாரிலும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி குற்ற வழக்குகளில் சிக்கி வந்ததால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து இவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications