அஜித் குமார் மரணத்தின் வடு ஆறும் முன்பே.. மற்றொரு சம்பவம்! கொளத்தூர் காவல் அதிகாரி மீது அண்ணாமலை பகீர்
சென்னை: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் இன்று சென்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக இருக்கும் பாண்டியராஜன், வழக்கு எதுவும் பதியாமல் எப்படி நவீனை விசாரித்தார்?, உண்மையில் காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா என்று கூறியுள்ளார்.
திருமலா பால் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் நவீன் பொல்லினேனி (வயது 37). இவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நவீன் ரூ. 44.5 கோடியை நிறுவனத்தில் இருந்து கையாடல் செய்யததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விசாரணை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நவீன் மீது கடந்த 27 ஆம் தேதி புகாரளித்த நிலையில் இதுவரை வழக்கு எதுவும் பதியாமல் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணைய பாண்டியராஜன் எப்படி அவர் விசாரித்தார் என்றும், திருப்புவனம் சம்பவத்துக்கு பின்பும் இப்படியொரு சம்பவம் நடக்கிறது என்றால் உண்மையிலேயே காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும், தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த திரு. நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி, திரு. நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை.
தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதல்வர் ஸ்டாலின்? உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?
உடனடியாக, திரு. நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications