பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்!
சென்னை: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை இயக்கத்தில் இணைந்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த அண்ணாமலை காட்டிய வழியை 2 ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியிருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை அந்தக் கட்சியிலிருந்து விலகினார். ஏற்கெனவே அவர் நடத்திய We the leaders என்ற அமைப்பில் தனது ஆதரவாளர்கள் இணையுமாறு அழைப்பு விடுத்தார். தற்போது வரை அண்ணாமலையின் இயக்கத்தில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகி அண்ணாமலைக்குப் பின்னால் அணிவகுத்து வருகின்றனர். பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த கரு.நாகராஜன், பாஜக மாவட்ட தலைவர்களாக இருந்த பாலாஜி உத்தம ராமசாமி, கே.வசந்தராஜன் உள்ளிட்ட பலரும் அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த அண்ணாமலை காட்டிய வழியை 2 ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியிருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது பாஜகவிலிருந்து விலகியுள்ள அவர், அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்க தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசிய நரசிம்மன், "கடந்த ஓராண்டாக தமிழக பாஜக சிறப்பாக செய்யப்படவில்லை. இது எங்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. தோ்தல் காலத்தில், கட்சியை எதிா்த்து பேசக்கூடாது என்ற நோக்கில் அமைதியாக இருந்து, தலைமை அளித்த பணியைச் செய்தோம்.
இந்த சூழ்நிலையில், பாஜகவில் தொடா்ந்து பயணித்தால் பொதுமக்களுக்கு எந்த பணியையும் செய்ய இயலாது என்பதால் விலகத் தீா்மானித்தேன். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து, ஒரு இயக்கம் ஆட்சி அமைத்துள்ளது. இதே பணியை அண்ணாமலை தலைமையில் இரண்டு ஆண்டுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும்.
எனவே, அண்ணாமலை எடுத்துள்ள முடிவை நானும் என்னுடைய பகுதியில் உள்ள தொண்டா்களும், நிா்வாகிகளும் ஏற்று, தமிழகம் மற்றும் மக்களை காப்பதற்கும், புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த மாற்றம் அண்ணாமலை தலைமையில் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு, அவருடன் பயணிக்கத் தயாராகிவிட்டோம்.
பிரதமர் மோடியின் மீது எங்களுக்கு வருத்தமும், குறையும் இல்லை. ஆனால் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறபோது அண்ணாமலைக்கு ஈடாக, இணையாக யாரும் இல்லை. ஆகவே அவரது பாதையில் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் தேசிய எண்ணத்தை வைத்துள்ள ஒரு தமிழக கட்சியாக இந்த இயக்கம் விரைவில் வரப்போகிறது. இந்த இயக்கம், பாஜகவுக்கும், மோடிக்கும் எதிரானது அல்ல. அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் அச்சமின்றி இந்த இயக்கத்தில் இணைந்து வருகிறாா்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications