'என்ன நடக்கிறது தூர்தர்ஷனில்.. திராணி இருக்கா'.. முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சரமாரி கேள்வி
சென்னை: சிறுபிள்ளைத்தனமாகவும், பொறுப்பின்றியும் செயல்பட எதற்காக இவ்வளவு பெரிய நிறுவனம்? மக்கள் பணத்தை விரையம் செய்யும் தூர்தர்ஷன், இந்திய வானிலை மையம் போன்ற நிறுவனங்கள், அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு சேவையளிக்கவில்லை எனில், அவை தேவையற்ற செலவினங்கள், மூடப்பட வேண்டியவை என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டுப் பாடியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து நடந்தது தெரியாமல் நடந்த தவறு என டிடி தமிழ் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது . அந்த அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன்விழா நிகழ்வில் கலந்துகொண்டு விழவைச் சிறப்பித்தார். நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக ஒரு வரி தவறிவிட்டது. கவனக்குறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை. இந்த விஷயத்தில், ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று தூர்தர்ஷன் தமிழ் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கூறியிருந்தார்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட பதிவில், " என்ன நடக்கிறது தூர்தர்ஷனில்?
- தமிழ்த்தாயை அவமதித்து விட்டு சம்பந்தமேயில்லாமல் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள்! ஆளுநர் ஆர்என் ரவிக்க்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?
- இலச்சினையை (Logo) நீல நிறத்தில் இருந்து காவி நிறமாக மாற்றினீர்கள்; ஏன்?
- பொதிகை என்ற அழகிய தமிழ்ப்பெயரை நீக்கினீர்கள்; எதற்காக?
- ஆர்.எஸ்.எஸ் கோரியதால் மதப்பிரச்சார கருத்துக்களை ஒளிபரப்பினீர்கள்; மக்கள் பணத்தில் மதப்பிரச்சாரம் எதற்கு?
- அரசு முத்திரை பதித்த தங்களது letterhead-ல் BROADCASTER என்பதைக் கூட எழுத்துப்பிழையுடன் பதித்திருகிறீர்கள். ஆங்கிலமும் பிழை!
இப்படி சிறுபிள்ளைத்தனமாகவும், பொறுப்பின்றியும் செயல்பட எதற்காக இவ்வளவு பெரிய நிறுவனம்? மக்கள் பணத்தை விரையம் செய்யும் தூர்தர்ஷன், இந்திய வானிலை மையம் போன்ற நிறுவனங்கள், அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு சேவையளிக்கவில்லை எனில், அவை தேவையற்ற செலவினங்கள், மூடப்பட வேண்டியவை!
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம், நாங்கள் கேட்கிறோம், தூர்தர்ஷனில் மதபிரச்சார கருத்துக்களை ஒளிபரப்புவதற்கு ஈடாக, தினமும் மாலை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கருத்துக்களை ஒளிபரப்ப வேண்டும், ஒளிபரப்ப திராணி இருக்கிறதா?" இவ்வாறு கூறியள்ளார்.












Click it and Unblock the Notifications