'பாட்ஷா' தயாரிப்பாளர் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. ஸ்டாலின் 'இதயத்தில்' இடம்
சென்னை: நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் 94 வயதான பழுத்த அரசியல்வாதி.
இந்நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஒருமனதாக ஆதரவு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எம்.ஜி.ஆர்.கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் மற்றும் பொதுச்செயலாளர் திரு.டிராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகின்ற 6.4.2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினையும் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளையும் ஆதரிப்பதாக எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியுடன்
மேலும், எம்.ஜி.ஆர்.கழக மாவட்ட செயலாளர்கள் - நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் உள்ள தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து கூட்டணி வெற்றி பெற முழு மனதுடன் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பறிபோன பதவி
முன்னாள் அதிமுக அமைச்சரான ஆர்.எம்.வீரப்பன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தின் தயாரிப்பாளர் என்பது இப்போது உள்ள தலைமுறையினர் பலருக்கும் தெரியாத தகவல். அதுமட்டுமின்றி அப்படத்தின் வெள்ளி விழாவில் ரஜினியின் பேச்சால், ஆர்.எம்.வீரப்பனின் பதவியே பறிபோனது.
ஜெ., அதிரடி
ஜெயலலிதா முதல்வராக இருந்த 91 - 96 காலத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறின. இதனை, 'பாட்ஷா' வெள்ளி விழாவில் பேசிய ரஜினி, 'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டது' என்றார். அப்போது, அதே விழாவில், தயாரிப்பாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனும் இருந்தார். ஆனால், ரஜினியின் இந்த பேச்சுக்கு அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
கொந்தளித்த ரசிகர்கள்
பதவி பறிப்புக்கு முன்பு, 'துரோகியை நீக்குங்கள்' என்று அதிமுகவினர் கொந்தளிக்க, ரஜினிக்கும் எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 'ரஜினி அரசியலில் ஈடுபடவேண்டும். தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை அவரது ரசிகர்கள் முன்வைக்க, அப்போது தொடங்கியது ரஜினியின் இந்த 'அரசியல் வருகை' எனும் நெடு நீண்ட தொடர்.
ஆதரவு கொடுத்திருப்பாரோ
இந்த நிலையில், ரஜினியும் அரசியலுக்கு வரவில்லை என்று இந்த 2021ல் அறிவிக்க, 94 வயதான ஆர்,எம்.வீரப்பன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கியிருந்தால் அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பாரோ என்னவோ!