முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அடுத்த சிக்கல்! தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் கைது.. போலீஸ் அதிரடி
சென்னை: திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப். 19ஆம் தேதி 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்கப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே சிறுசிறு பூசல்கள் நடந்தது.

திமுக நிர்வாகி மீது தாக்குதல்
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் சென்னை ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறி ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கி உள்ளனர்.

திமுக புகார்
அப்போது அந்த திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அரை நிர்வாணப்படுத்தி அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தார். சபாநாயகர், அமைச்சர் எனப் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த ஜெயக்குமார் இதைத் தடுக்காமல் அதிமுகவினருடன் இணைந்து அவரை தாக்கியதாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது.

கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அழித்த புகாரின் பேரில் கடந்த 21ஆம் தேதி இரவு 8 மணியளவில் பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்தனர். அதேபோல போல உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது, சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதில் சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்த போதிலும், திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கில் ஜாமின் கிடைக்கவில்லை. அடுத்த 2 நாட்கள் நீதிமன்றம் விடுமுறை என்பதால், அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கு
இதனிடையே 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவில் மகேஷ் என்பவர் புகார் அளித்தார். மகேஷ்குக்கு சொந்தமான 8 கிரவுண்ட் தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மிரட்டி அபகரித்துக் கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கில் கைது
ஜெயக்குமார் மீது புகார் அளித்துள்ள மகேஷின் தம்பி நவீன். இவர் ஜெயக்குமாரின் மகளை மணந்தவர். மாமனார் ஜெயக்குமாருடன் சேர்ந்து சொந்த அண்ணன் இடத்தையே நவீன் அபகரித்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஜெயக்குமார், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது குற்றச் சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே சிறையில் உள்ள ஜெயக்குமார் தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications