மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவு... தேடுதல் வேட்டைக்காக போலீஸ் சிறப்பு தனிப்படைகள் அமைப்பு!
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேடுதல் வேட்டையில் போலீஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதற்காக ஒரு டி.எஸ்.பி மற்றும் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் உள்ளது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் அடிப்படையில் விருதுநகரில் வழக்கு பதியப்பட்டது. இதில் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார்.

ஜாமீன்
இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார் முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கைது
இந்த வழக்கில் முன் ஜாமீன் கிடைக்காத காரணத்தால் தற்போது ராஜேந்திர பாலாஜி கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தலைமறைவு
அவரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ ராஜேந்திர பாலாஜி இப்போது இல்லை. இந்த தீர்ப்பு வந்த பின் அவர் வெளியே எங்கும் வரவில்லை. அவர் தற்போது கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் வகையில் ரகசிய இடத்தில் தங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தனிப்படை அமைப்பு
தனிப்படை அவரின் உறவினர்கள், நபர்கள் வீடுகளில் போலீசார் தேடும் முடிவில் உள்ளனர். இவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் போலீஸ் தீவிரம் காட்டியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக ஒரு டி.எஸ்.பி மற்றும் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications