வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!
சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.28 கோடி முறைகேடு வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து வைப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
2011-16 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ரூ.28 கோடி முறைகேடு புகாரில் வைத்திலிங்கம் மீது வழக்கு தொடரப்பட்டது. வரும் ஜூன் 12 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவு எடுக்கிறது.

2011- 2016 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் வைத்திலிங்கம். தற்போது ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் வைத்திலிங்கம், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு பதியப்பட்டது.
சென்னை பெருங்களத்துரில், 2016 அம் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, தனியார் நிறுவனம் அனுமதி கோரியது. அப்போது, அதிமுக ஆட்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு, 27.90 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த 2024 செப்டம்பர் 24ஆம் தேதி திமுக ஆட்சியில் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோருக்கு சொந்தமான முத்தம்மாள் நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்ப்பட்டது.
ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், வைத்திலிங்கம் கடந்த ஜனவரி 21ஆம் தேதி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 25ல் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
வைத்திலிங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்கை கைவிடுவதாகக் கூறி, கடந்த வாரம் வழக்கை முடித்து வைத்துள்ளதாக, அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் வரும் 12 ஆம் தேதி, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை மீது, உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலுக்கு முன், திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் மீதான வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையால் முடித்து வைக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications