பாஜக பக்கம் ஜிகே வாசன்.. பதறி ஓடி.. காங்கிரசில் சேர்ந்து கொண்ட த.மா.கா முக்கிய நிர்வாகி!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால், அக்கட்சியில் இருந்து விலகிய தமாகா தலைமை நிலைய செயலாளர் அசோகன் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு ஆலோசனைகள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சார பணிகள் என தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

பாஜகவுடன் தமாகா கூட்டணி: திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ளன. தேமுதிக, பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமாகாவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தமாகா பாஜக அணியில் இணைந்தது.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் சமீபத்தில் அறிவித்தார். ஜிகே வாசனும் அண்ணாமலையும் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். ஜிகே வாசன் தங்களை வழிநடத்துவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி அறிவித்ததுமே அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது தான் என பின்னர் விளக்கம் அளித்தார் யுவராஜா.
தமாகா நிர்வாகி விலகல்: தமாகா தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பாஜகவுடன் தமாகா கூட்டணி வைத்ததை கண்டித்து அவர் கட்சியில் இருந்து விலகினார். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த தான், 1996 ஆம் ஆண்டு முதல் ஜிகே மூப்பனாரின் தலைமையை ஏற்று தமிழ் மாநில காங்கிரஸில் பயணித்து அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன்.
அதே போல மூப்பனாரின் மறைவுக்கு பின் அவருடைய புதல்வராகிய தங்களின் தலைமையை ஏற்று தலைமை நிலைய செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாங்கள் எடுத்துள்ள பா.ஜ.க கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கட்சியில் இருந்து விலகுகிறேன் என ஜிகே வாசனுக்கு எழுதிய தனது விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தார் அசோகன்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்: இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோகன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் சிலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அசோகன் பேசுகையில், "பாஜக உடனான கூட்டணியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிருப்தியில் உள்ள இன்னும் பலர் விரைவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வருவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அப்செட்: பாஜகவுடனான கூட்டணியை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. அப்போதும் அந்த கூட்டணியில் தமாகா இடம் பெற்றிருந்தது. அதனை அக்கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். தற்போது அதிமுகவை விட்டு விலகி பாஜக கூட்டணியில் இணைந்திருப்பதால் அதிருப்தி அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு பேசுகிறது பாஜக. சர்வாதிகாரப் போக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் அண்ணன் தம்பி போல செயல்படுகிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தொய்வும் இல்லை. விரைவில் முடிவு எட்டப்படும். 2 நாட்களில் எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருவார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications