"பார்முலா 65".. சமரசமே கூடாது.. எடப்பாடி "சரவெடி".. ஓபிஎஸ் மட்டுமல்ல ஏகப்பட்ட தலைகளுக்கு ஆப்பு?
சென்னை: அதிமுகவில் நிர்வாக ரீதியான மிக முக்கியமான மாற்றம் ஒன்றை செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமாக நடந்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் அணிக்கும், எடப்பாடி பழனிசாமி அணிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். இந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இதனால் கட்சிக்குள் தற்போது எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி கை
அதிமுகவில் தற்போது 75 அமைப்பு ரீதியான மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் சிலர் வெளிப்படையாக எடப்பாடிக்கு எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஆதரவு தருகிறார்கள். ஆனால் சில மாவட்ட செயலாளர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் எப்போது வேண்டுமானாலும் சாய்வதற்கு ரெடியாக உள்ளனர். அதாவது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் எப்போது வேண்டுமானாலும் அவரின் டீமிற்கு செல்ல மாவட்ட செயலாளர்கள் சிலர் ரெடியாக இருக்கிறார்கள்.

ஒன்றிய செயலாளர்
சில மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் போன்ற ஒன்றிய நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் செல்ல தயாராக உள்ளனர். இதனால் மாவட்ட அளவில் பல இடங்களில் நிர்வாகிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களாகவும், அதே மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். அதுவே சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களாகவும், அதே மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள்.

பூசல்
இதனால் மாவட்ட அளவில் பல இடங்களில் உட்கட்சி பூசலும், கருத்து வேறுபாடும் நிலவி வருகிறது. இது கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தனக்கு எதிராக இருக்கும் நிர்வாகிகளை மொத்தமாக நீக்கும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது.

பிளான் என்ன
இந்த தேர்தலுக்கு முன்பாக மொத்தமாக தனக்கு ஆதரவாக இல்லாத நிர்வாகிகளை நீக்கும் முடிவில் எடப்பாடி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் மட்டும் சமரசம் செய்ய கூடாது, தயவுதாட்சனையே பார்க்க கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்காக எடப்பாடி கையில் எடுத்திருக்கும் பிளான்தான், "பார்முலா 65" என்கிறார்கள். அதிமுகவில் தற்போது 75 அமைப்பு ரீதியான மாவட்டங்கள் இருக்கின்றன.

பார்முலா 65
இதன் காரணமாகவே பல மாவட்டங்களை கவனிக்க முடியவில்லை. மாவட்டங்கள் பெரிதாக இருந்து, முக்கிய தலைகளை மாவட்ட செயலாளர்களாக போட்டால் மற்ற தலைகள் அடங்கி விடுவார்கள். இதனால் மாவட்டங்களை 75ல் இருந்து 65 ஆக குறைக்கும் முடிவில் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது.அதற்கு முன்பாக அவர் இந்த மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications