வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: வடக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.. இதையடுத்து, தமிழகம், மற்றும் புதுச்சேரியில் எங்கெங்கு இன்று மழைக்கு வாய்ப்பு என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..
இதனால், வடக்கு, தெற்கு, மத்திய வங்க கடல், ஆந்திரா, அந்தமான், மன்னார்வளைகுடா பகுதிகளில் 13-ம்தேதி வரை மணிக்கு 60.கி-மீ, வேகம்வரை பலத்த காற்று வீசக்கூடும்.
கொட்டியது பருவமழை.. முதல் நாளே நீரில் தத்தளிக்கும் மும்பை.. பஸ், ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
வானிலை
கேரளா, கர்நாடகா கடலோரம், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளிலும், 13ம் தேதி வரை பலத்த காற்று வீசும்... இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மன்னார் வளைகுடா
அதாவது இன்று முதல் 13ம் தேதி வரை தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.. அதேபோல் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்... கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும்..
காற்று
இன்று முதல் ஜுன் 13ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. வடக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் எதிரொலியாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று எந்தெந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்னலுடன் கூடிய மழை
அதன்படி, வெப்பச்சலனம் காரணமாக இன்றைய தினம், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
நாளை, நாளை மறுநாள் அதாவது ஜுன் 11 மற்றும் 12 தேதிகளில், கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி புதுவை, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.