இது 4வது முறை.. தொடர்ந்து ஆளுநர் உரையைப் புறக்கணித்த ஆர்.என்.ரவி! இதுவரை சட்டசபையில் நடந்தது என்ன?
சென்னை: 2026ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து 4 முறை ஆளுநர் உரையை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 2023 பகுதியளவு வாசித்த ஆளுநர், 2024, 2025ஆம் ஆண்டிலும், தற்போது 2026 என தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
20216ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை கூடியது. வழக்கம் போல ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல் கூட்டத் தொடர் ஆரம்பமானது.
சட்டமன்ற நடைமுறைகளின் படி, சட்டசபைக் கூட்டத் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்ததாக கூறப்படுகிறது.

தேசிய கீதத்திற்குப் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், அவர் சில நிமிடங்களில் அவையை விட்டு வெளியேறினார். முன்னதாக இன்று காலை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, சபாநாயகர் அப்பாவு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வரலாற்றுப் புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.
இதனால் கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநரின் திடீரென வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அவையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு அவையில் வாசித்தார். ஆளுநர் உரையை வாசிக்காவிட்டாலும், அரசு தயாரித்த உரை அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டமன்ற விதிமுறையின் அடிப்படையில், அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
தமிழக அரசு மற்றும் ஆளுநர் மாளிகை இடையிலான இந்த மோதல் புதியதல்ல. 2023ஆம் ஆண்டில் உரையின் சில பகுதிகளைத் தவிர்த்து வாசித்ததை சபாநாயகர் ரத்து செய்து, முழு உரையையும் அவையில் வாசித்தார். அதன் தொடர்ச்சியாக, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளிலும் தேசிய கீத விவகாரத்தை முன்வைத்து ஆளுநர் உரையை புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
விரிவாக பார்க்கும் போது, 2023 ஜனவரியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையின் சில பகுதிகளை (குறிப்பாக சில வார்த்தைகளைத் தவிர்த்து) ஆளுநர் வாசிக்காமல் இருந்ததால், முதலமைச்சர் குறிப்பிட்ட பிறகு ஆளுநர் பாதியிலேயே முதல் முறை வெளியேறினார். 2024 ஆண்டில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டு, தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி உரையை முழுமையாக வாசிக்காமல் சில வரிகள் மட்டும் படித்து இரண்டாவது முறை) வெளியேறினார்.
2025 ஜனவரி 6ஆம் தேதி மீண்டும் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று காரணம் காட்டி, உரையைத் தொடங்காமலேயே 3 நிமிடங்களில் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், இந்த ஆண்டும் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி ஆளுநர் உரையை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 2026 ஜனவரி 20ஆம் தேதியான இன்று தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற அதே காரணத்தை கூறி ஆளுநர் சில நிமிடங்களில் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications