சென்னை போலீஸ் கமிஷனருக்கே விபூதியா? டி.பியில் அருண் ஐபிஎஸ்.. மோசடி முயற்சி.. விசாரணையில் காவல்துறை!
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பெயர் மற்றும் புகைப்படத்தை வாட்ஸ் அப் செயலியில் டி.பியாக பயன்படுத்தி சைபர் க்ரைம் மோசடி முயற்சியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருவர் புகைப்பட ஆதாரத்துடன் பதிவிட்ட நிலையில், சென்னை மாநகர காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
+92 எனத் தொடங்கும் செல்போன் எண்ணின் வாட்ஸ் அப் DP-ல் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்பட ஆதாரத்துடன் ஒருவர் எக்ஸ் தளத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. +92 என தொடங்கும் எண் என்பதால் இந்த அழைப்பை எடுக்கவில்லை. இந்த நம்பரில் சென்னை காவல் ஆணையர் அருண் பெயரையும் புகைப்படத்தையும் டிஸ்பிளே பிக்சராக வைத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு நபர் எக்ஸ் தளத்தில் கேட்டுக்கொண்டார்.
இதற்கு இந்தப் புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர காவல்துறையின் எக்ஸ் பக்கத்தில் இருந்து அந்த நபருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது “கொரியர் மோசடி” மலிந்து வருகிறது. ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து, தாங்கள் காவல்துறையில் இருந்து உங்கள் தொலைபேசி எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி பயம் ஏற்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அதுபோன்று, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் படத்தை டி.பியாக வைத்து மர்ம கும்பல், அப்பாவிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மற்றொரு பக்கம் இது தொடர்பான மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அண்மையில் பொறுப்பேற்ற அருண் ஐபிஎஸ், சென்னையில் சட்டம் ஒழுங்கை காக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். அவர் பொறுப்பேற்ற பிறகு நூற்றுக்கணக்கானோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அருண், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.
மேலும், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பதில் அளிக்கப்படும் என்றும் அதிரடியாக கூறி இருந்தார். தொடர்ந்து சென்னை முழுவதும், குற்றப் பின்னணி கொண்ட 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர்களுக்கு அதிரடி உத்தரவும் பிறப்பித்திருந்தார்.












Click it and Unblock the Notifications