தடுப்பூசி போட்டீங்களே பதிவாகிடுச்சானு போன்ல கேட்டா.. உஷாரா இருங்கள்.. புது வகையான மோசடி வைரல்!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டாச்சான்னு கேட்டு புதிய வகையான மோசடியில் சிலர் இறங்கியுள்ளனர். எனவே மக்களே உஷாராக இருங்கள் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
பண மோசடிகளில் பல வகைகள் உண்டு. இன்று விஞ்ஞானம் வளர வளர புதிய தொழில்நுட்பங்களை கொண்டு கொள்ளையடிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் அதாவது ஏடிஎம் இயந்திரம் வருவதற்கு முன்னர் வங்கியிலிருந்து பணம் கொண்டு வரும் நபரை திசை திருப்பி திருடி கொண்டிருந்தனர்.
இதன் பிறகு ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துக் கொடுப்பதாக உதவி செய்வது போல் நடித்து பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் ஆன்லைன் பண பரிமாற்றத்தில் மோசடி செய்தனர்.

வங்கி மேலாளர்
அதாவது யாருக்காவது ஒருவருக்கு போன் செய்து சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி ஏடிஎம் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணையும் அதன் பின்னால் உள்ள 3 இலக்க சிவிவி எண்ணையும் கேட்டு அதன் மூலம் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும் 1000 போட்டால் அடுத்த மாதம் ரூ 2000 கிடைக்கும் என நம்பிக்கை கொடுத்து ஏமாற்றினர்.

கணிசமான தொகை
தங்கள் செல்போன் எண்ணிக்கு பரிசு விழுந்ததாகவும் அதை பெற கணிசமான தொகையை வங்கிக் கணக்கிற்கு செலுத்துமாறும் கூறுவர். இதை நம்பாதவர்கள் பிரச்சினை இல்லை. நம்பி செலுத்தினால் அவர்கள் ஏமாற்றமடைந்து போலீஸில் புகார் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் நிதி நிறுவனம் நடத்திவிட்டு மோசடி செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

பார்சல்
உங்கள் போன் எண்ணுக்கு பரிசு விழுந்துள்ளதாகவும் வீட்டு முகவரிக்கு பரிசை அனுப்பியதாகவும் கூறும் இந்த மோசடி பேர்வழிகள், அந்த பரிசை கொரியரில் இருந்து பெற கணிசமான தொகையை கேட்கிறார்கள். அவ்வாறு செலுத்திவிட்டு அந்த பார்சலை பிரித்தால் அதில் வெறும் செங்கற்களும், காகிதங்களும் இருக்கும்.

கொரோனா தடுப்பூசி
இப்படியாக பல மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது புதிதாக கொரோனா தடுப்பூசியை வைத்து மோசடி நடைபெறுகிறது. முன்னர் நடந்த மோசடிகள் வடமாநிலத்தவர் அரங்கேற்றி வந்தனர். ஆனால் இந்த கொரோனா ஊசி மோசடியை நம் ஊரை சேர்ந்தவர்களே நிகழ்த்துகிறார்கள். அதாவது ஒரு நம்பருக்கு போன் செய்து கொரோனா தடுப்பூசி போட்டு விட்டீர்களா என கேட்கிறார்கள்.

பதிவாகவில்லை
அதற்கு போட்டு விட்டோம் என்றால், நீங்கள் தடுப்பூசி போட்டது அரசு ஆவணத்தில் பதிவாகவில்லை என்கிறார்கள். அவ்வாறு பதிவாகாமல் இருந்தால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கிடைக்கும் உதவிகள் கிடைக்காது என்கிறார்கள். எனவே எந்த இடத்தில் எந்த நாளில் எந்த முகாமில் தடுப்பூசி போட்டீர்கள் என சொல்லுமாறு கேட்கிறார்கள். அதை சொன்னவுடன் நாங்கள் அரசு ஆவணத்தில் பதிவு செய்கிறோம், உங்களுக்கு ஒரு ஓடிபி (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் எண்) வரும். அதை சொல்லுங்கள் என கூறி அந்த எண்ணை வாங்கிவிட்டு நீங்கள் பதிவு செய்த மெசேஜ் வரும் என கூறி இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். பின்னர் பார்த்தால் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போனதாக பலர் புகார் அளித்துள்ளனர். எனவே மக்களே உஷாராக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications