இலவச வீட்டு மனை பட்டா.. அருந்ததியர்களுக்கு பட்டாவில் முன்னுரிமை தேவை.. பாயிண்ட்டை சொன்ன பாலபாரதி
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் முகாம்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.. இம்முகாம்களில் மகளிர் உரிமைத் தொகையை கேட்டு, சுமார் 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருக்கிறார்களாம்.. இதனால் தினந்தோறும் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அரசு நிர்வாகம் துரிதமாக செயல்படுத்தவில்லை என்று ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மக்களைத் தேடி அரசு என்ற நோக்கில் "உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" முகாம்களை தமிழகம் முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த முகாம்கள் மூலம் நகர் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகளும், கிராமப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 45 சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

45 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு என அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து இடங்களிலுமே இந்த முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அமோக ஆதரவு
தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய சேவைகளை இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் பெற்று வருகிறார்கள்.. எனினும், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களே அதிகளவில் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் மீதான முடிவு தெரிந்துவிடும் என தமிழக அரசு உறுதியளித்தது.. ஆனால், வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 2 மணி நேரத்தில் 10 பயனாளிகளுக்கு உடனடியாக ரேஷன் அட்டை வழங்கப்பட்டது.. 4 பேருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது.
புலம்பும் வருவாய்த்துறை?
பொதுமக்களின் ஆதரவை இந்த முகாம்கள் பெற்று வருவதால், நவம்பர் வரைக்கும் படி 10 ஆயிரம் முகாம்களை நடத்த உள்ளதாக அரசு சொல்லி வருகிறது.. ஆனால், அதற்கான நிதியை போதிய அளவில் ஒதுக்காததால் திணறி வருவதாக, உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் சொல்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.. விடுமுறை நாட்களிலும் முகாம்கள் நடத்தப்படுவதாலும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என்று வருவாய்த் துறையினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் சிறப்பானதாக இருந்தாலும், இதை அரசு நிர்வாகம் துரிதமாகச் செயல்படுத்தவில்லை என்று ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி அதிரடியாக கூறியிருக்கிறார்.
மதுரையில் தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை மற்றும் பட்டா குறித்த கணக் கெடுப்பு ஆய்வறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது..
இலவச வீட்டு மனைகள் - பட்டா
தமிழக அரசு 25 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரம் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகளை வழங்கியிருந்தாலும், இதில் இதுவரை வீட்டுமனைக்கு பட்டா கிடைக்காமலும், பட்டா உள்ளவர்களுக்கு வீட்டு மனை இடம் கிடைக்காமலும் உள்ளனர்.
எனவே, இது தொடர்பாக தமிழக தொழிலாளர் உரிமைகள் கூட்டமைப்பு சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.. இதனை ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கா.பாலபாரதி, ஆதித்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன் ஆகியோர் வெளியிட்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு பாலபாரதி செய்தியாளர்கள்டம் சொல்லும்போது, உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், நோக்கமும் சிறப்பானதுதான்.. ஆனால் நிர்வாக அமைப்பு துரிதமாகச் செயல்படவில்லை. இந்த திட்டத்தில் மனு அளித்தால் 45 நாட்கள் என கால அவகாசம் உள்ளதே தவிர, நிர்வாகம் செயல்படவில்லை. இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
தூய்மை பணியாளர்களான அருந்ததியர் வீடற்றவர்களாக, பட்டா இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.. தமிழக அரசு அருந்ததியர்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். அருந்ததியர் அளிக்கும் மனுக்களுக்குக்கூட அதிகாரிகள் முறையாக பதில் தருவதில்லை" என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications