கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம்.. ஜனவரி 5ல் தொடங்கி வைக்கும் ஸ்டாலின்!
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 கோடி மதிப்பில் 10 லட்சம் லேப்டாப்கள் தமிழக அரசு சார்பாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இதன்பின் கொரோனா பரவல் காரணமாக இலவச லேப்டாப் திட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டிலேயே வெளியானது.

இதையடுத்து டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டு, டெல், ஏசர் மற்றும் எச்பி ஆகிய 3 நிறுவனங்களிடம் இருந்து லேப்டாப் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்தது. மொத்தமாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் 10 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேவையென்றால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
ஒரு லேப்டாப்பின் விலையாக ரூ.20 ஆயிரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக Processor மற்றும் நீண்டநேரம் தாங்கும் பேட்டரி, ஹார்ட் டிஸ்க் என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் தமிழக அரசு கொடுக்கும் லேப்டாப்பில் இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இதனிடையே இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு வழங்கப்பட உள்ள இலவச லேப்டாப் திட்டம் புத்தாண்டு விடுமுறைக்கு பின் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். லேப்டாப் திட்டத்துடன் சேர்த்து Preplexity Pro AI வசதியும் 6 மாதங்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் இலவச லேப்டாப் திட்டம் ஜனவரி 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் அத்தனை மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications