கொரோனா நிவாரணம் - தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி
நவம்பர் மாதம் வரை ரேசன்கடைகளில் இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க லாக் டவுன் நீடிக்கப்பட்டு வரும் நிலையில் நவம்பர் மாதம் வரை ரேசன்கடைகளில் இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி கரீப் கல்யாண் யோஜனா அன்ன போஜனா திட்டத்தை நவம்பர் வரை நீட்டித்து அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழக அரசும் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் இலவச ரேசன் அரிசி திட்டத்தை நீட்டித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஜூன் 8ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் லாக் டவுன் அமலில் உள்ளது.

லாக்டவுனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு, நிவாரணம் வழங்குவதற்காக ரூ.3,280 கோடியில் சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது. இதனடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க உதவித்தொகையுடன் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.
இதேபோல் மே, ஜூன் மாதங்களைத் தொடர்ந்து தற்போது ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்கு, இன்று முதல் 9ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அதில் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஜூலை 10ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் மாதம் வரை ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும். ஏற்கனவே அதிகபட்சமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்படும்.
ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும். பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications