ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க ஆகஸ்ட் 1,3,4ஆம் தேதிகளில் வீடு வீடாக டோக்கன் கொடுப்பாங்க
ஆகஸ்ட் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேசன் கடை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: ஆகஸ்ட் மாதத்திற்கான ரேசன் பொருட்களை வாங்குவதற்காக ஆகஸ்ட் 1,3,4ஆம் தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும் ஆகஸ்ட் 5 முதல் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று ரேசன்கடைகள் திறந்திருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேசன் கடைகளில் இலவச பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்படுகின்றன. டோக்கன்கள் கொடுத்து அந்த நேரத்திற்கு போய் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி வருகின்றனர்.

நவம்பர் மாதம் வரை இலவச அரிசி கொடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு பொருட்கள் வாங்குவது எப்படி என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு இந்த தேதிகளில் வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தர வேண்டும். நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும். ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ரேசன் கடைகள் செயல்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ரேசன் கடைகளுக்கு 7ஆம்தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5 முதல் ரேசன் கடைகளில் இலவச மாஸ்க்குகள் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச அரிசி தவிர பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படுமா என்ற தகவல் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications