புதுச்சேரியில் களைக்கட்டிய பிரான்ஸ் அதிபர் தேர்தல்.. விறுவிறு வாக்குப்பதிவு! தேர்தல் முறை எப்படி
சென்னை: பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
Recommended Video
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மாக்ரோன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் இன்று காலை முதல் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பிரான்ஸ் அதிபர் தேர்தல்
பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே உள்ள அந்நாட்டிற்குச் சொந்தமான பகுதிகளிலும் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. வெவ்வேறு டைம் ஜோன்கள் காரணமாக ஏற்கனவே கனடா கரீபியன் பகுதிகளில் உள்ள பிரஞ்சு பிரதேசங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள மொத்தம் 4564 பிரான்ஸ் குடிமக்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
விறுவிறு வாக்குப்பதிவு
அதன்படி இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டை பொருத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படும். கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மக்ரோன் 66 சதவீத வாக்குகளைப் பெற்ற வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை அவருக்கு எதிர்ப்புகள் அதிகமாக உள்ளதால் மீண்டும் வெல்வது சற்று சிரமம் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதிபர் தேர்தல் முறை
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் முறைப்படி முதல் சுற்றில் குறைந்தது 50% வாக்குகளைப் பெறும் நபர்கள் தேர்தலில் வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதேநேரம் எந்த வேட்பாளருக்கும் 50% வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் இந்தத் தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டும் பங்குபெறும் இரண்டாம் சுற்றுத் தேர்தல் நடத்தப்படும். அதில் 50% வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். பிரான்ஸ் 2ஆம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரி
இதற்காகப் புதுச்சேரியில் இரு வாக்குப்பதிவு மையங்களும், சென்னை மற்றும் காரைக்காலில் ஒரு வாக்குப்பதிவு மையத்தையும் பிரான்ஸ் தூதரகம் ஏற்படுத்தி உள்ளது.. இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பிரான்ஸ் குடிமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 18 வயதைத் தாண்டிய பிரான்ஸ் குடிமக்கள் வெளிநாட்டில் வசித்தாலும், அவர்கள் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கலாம்.