சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள்
சென்னை: சென்னை பெரம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்று இரவு முதல் சத்தியமூர்த்தி நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பெரம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்று இரவு முதல் சத்தியமூர்த்தி நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. தொடர் மின்வெட்டால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட பொதுமக்கள், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மின்வாரியத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையான வெப்பநிலை நிலவும் சூழலில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட்டதால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அதிக பாதிப்புக்குள்ளானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் மின்வெட்டு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், மின்சார விநியோகம் சீராகும் வரை போராட்டம் தொடரும் என சில பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மட்டுமல்ல சென்னை புறநகர் பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அங்கும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஒட்டி உள்ள கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு ஊராட்சியில் அடங்கிய கரிகாட்டுக்குப்பம், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தினமும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது பகல் நேரம் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது இது குறித்து மின்சார வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
கடந்த ஒரு மாத காலத்தில் மூன்று முறை கிழக்கு கடற்கரை சாலை இருபுறமும் வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு சுமார் எட்டு மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மறுநாள் அதிகாலை இன்று 12.30 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நான்காவது முறையாக இன்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கிழக்கு கடற்கரை சாலையை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் காவல்துறை அதிகாரிகள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர், அதற்கு வராத நிலையில் இறுதியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், மின்சாரத் தறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டது.
இதனால் சாலை மறியல் போராட்டத்தை கைவிடப்பட்டு காவல்துறை அதிகாரிக்கு நன்றி தெரிவித்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு வந்த திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விஜயராஜ் முட்டுக்காடு கிராம மக்களிடம் ஆறுதல் கூறி இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நீங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இருப்பினும் அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரை சிறை பிடித்து அவர்களின் கோரிக்கையை முன் வைத்தனர், மின்சாரத்துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று எம்எல்ஏவை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்து வருவதாகவும் இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்தும் இதனால் எந்த பலனும் இல்லை என்று கூறியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த எம்.எல். ஏ விஜயராஜ் சாலை மறியல் போன்ற ஏதாவது பிரச்சனை என்றால் செங்கல்பட்டில் இருந்து அதிகாரிகள் வருவார்கள்! மக்கள் ரோட்டுக்கு வந்தால் தான் அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வருவாங்க உங்களின் ஆதங்கமும் என்னால் புரிஞ்சிக்க முடியுது. இப்பொழுது ஆட்சி மாறி இருக்கு இதுக்கு முன்னாடியே இருந்த அதிகாரி தான் இப்பவும் இருக்கிறாங்க, அவங்களுக்கு இன்னும் ஒரு சில விஷயங்கள் புரிய வைக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மின்சாரம் மீண்டும் துண்டிக்கப்பட்டது இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர் அதனை சாமர்த்தியமாக கூறிய சட்டமன்ற உறுப்பினர் இது டெஸ்டிங் தான் பண்றாங்க யாரும் பதறாதீங்க என்று எம்எல்ஏ விஜயராஜ் கூறியுள்ளார்.
முட்டுக்காடு ஊராட்சிக்கு தனி துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். அது பெரிய ப்ராசஸ் ஆக உள்ளது. இப்போதைக்கு சின்ன சின்ன விஷயங்களை செய்து உங்களுக்கு பிரச்சனை வராத அளவுக்கு பார்த்துக் கொள்கிறேன். அதிக மின்சாரம் செல்வதால் டிரான்ஸ்பார்மர் அங்கங்கே வெடிக்கின்றது. இது போன்ற சிக்கல்கள் பல்வேறு இடங்களிலும் வந்தவண்ணமாக இருப்பதாகவும் இதனை கடந்த ஆட்சியில் சரியாக பண்ணாததால் நாங்கள் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications