உரிமைத் தொகை ரூ.1500 + ஸ்பெஷல் பரிசு ரூ.2500.. எடப்பாடி களமிறக்கிய மெகா பிளான்! இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே மகளிர் உரிமை தொகை ஹிட் அடித்துள்ள நிலையில் அதை உயர்த்த போவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக கூடுதலாக பல வாக்குறுதிகளையும் எடப்பாடி அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக பெண்களை மனதில் வைத்து பல வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறார். "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படும்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அறிவித்த ரூ.1,000 உரிமைத் தொகைக்கு ஆசைப்பட்டு, அதிமுக வழங்கவிருந்த ரூ.1,500ஐ மக்கள் தவறவிட்டதாக அவர் கூறினார்.
அதிமுக ஆட்சி அமைந்தால், பெண்கள் மனநிறைவு பெறும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பழனிசாமி குறிப்பிட்டார். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்குப் பிறகுதான் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகையை வழங்கியது. இது அதிமுக கொடுத்த அழுத்தத்தினாலேயே சாத்தியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
புதுமணத் தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி
திமுக அரசு சட்டமன்றத் தேர்தல் வரை மட்டுமே இந்த உரிமைத் தொகையை வழங்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், "திமுகவின் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் கொடுக்கவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்" என்று மக்களை நோக்கிக் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்தால், புதுமணத் தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்கள் கனவில் மட்டுமே வீடு கட்ட முடியும் என்றும் அவர் விமர்சித்தார்.
திமுக ஆட்சியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என பழனிசாமி குற்றம்சாட்டினார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மடிக்கணினி திட்டத்தை தற்போதைய அரசு நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறினார். கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்தபோது, அவர்களது நலன் கருதி 'ஆல் பாஸ்' போட்டது அதிமுக அரசு என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பொங்கலுக்கு ரூ.2,500 வழங்கப்படும்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற "தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்" சுற்றுப்பயணத்தின்போது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பொங்கலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும், தீபாவளிக்கு தரமான இலவச சேலைகள் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதிமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் ஏழைகள் என்ற நிலையே இருக்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே ஒத்திவைத்ததாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். இது அதிமுகவின் திறமை, தில்லு, திராணி மற்றும் மக்கள் மீதான அக்கறைக்குச் சான்று என்று அவர் கூறினார். மேலும், திமுகவில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், இந்த பிரச்சனையை ஏன் நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். "இது மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாங்கம். பை பை ஸ்டாலின்" என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.












Click it and Unblock the Notifications