ஒரு காலத்துல எப்படி இருந்தவங்க? அரசியல் முட்டு சந்தில் சசிகலா! தனித்தனி ரூட் எடுத்த விசுவாசிகள்!
சென்னை: எல்லையில்லா அதிகாரத்தோடு வலம் வந்த சசிகலாவின் அரசியல் பயணம் தற்போது முட்டு சந்தில் நிற்கிறது. சசிகலாவால் எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும், ஏன் முதலமைச்சராக ஆக்கப்பட்டவர்கள் தனித்தனி அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து இருக்கும் நிலையில் யாரும் இன்றி கிட்டத்தட்ட அரசியல் அனாதை ஆக்கப்பட்டு இருக்கிறார் சசிகலா. ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர் பாஜக தயவை நம்பி இருக்கும் நிலையில் சசிகலா என்ன செய்யப் போகிறார்? என்ற சஸ்பென்ஸ் அரசியல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
2026ல் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலையும் சசிகலா தவறவிட்டால், அவரது அரசியல் வாழ்க்கை பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதே அவரது ஆதரவாளர்களிடையே நிலவும் கவலையாக இருக்கிறது.
ஒருபுறம், பாஜக தரப்பில் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் குறித்து பேசப்படும் நிலையில், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா குறித்து எந்தத் தலைவரும் வெளிப்படையாக பேசுவதில்லை.

அதிமுக அதிகார அரசியல்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து, சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரனும் தனது அரசியல் எதிர்காலத்தை தனிப்பட்ட வழியில் வடிவமைத்துக் கொண்டுள்ள நிலையில், சசிகலா குறித்த கவலை அவரிடம் இல்லை என்பதே அரசியல் வட்டாரங்களின் மதிப்பீடு. அதேபோல், ஒருகாலத்தில் தன்னை முதல்வர் பதவியில் அமர்த்திய சசிகலா குறித்து ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இன்று பேசுவதில்லை. இருவரும் தங்களுக்கான அரசியல் பாதையை தனித்தனியாக அமைத்துக் கொள்வதில் தீவிரமாக இருக்கின்றனர்.
சசிகலா அரசியல் எதிர்காலம்
இவர்களை அரசியல் உயரத்திற்கு கொண்டு வந்த சசிகலாதான், இன்று தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நிற்கிறார் என்ற விமர்சனமும் எழுகிறது. இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், "இன்று சின்னம்மாவுக்கும் தினகரனுக்கும் விசுவாசமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர், அதிகாரத்தில் இருந்தபோது எந்தப் பயனும் பெறாதவர்கள். அந்த நேரத்தில் பலன் அடைந்தவர்கள்தான் இப்போது இவர்களுக்கு எதிராக நிற்கிறார்கள்.
டிடிவி தினகரன் பாதை
அதனால்தான் தினகரன் தனி வழி போக ஆரம்பித்துவிட்டார். ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவுக்குள் செல்ல அமித் ஷாவிடம் முயற்சி செய்து வருகிறார். சின்னம்மாவோ எந்த வழி என்று தெரியாமல் நிற்கிறார்" என்று கூறுகின்றனர். மொத்தத்தில், அதிமுக ஒருங்கிணைப்பு என்ற பெயரில் நீண்ட காலமாக நீடிக்கும் இந்த 'மௌன அரசியல்', சசிகலாவின் எதிர்காலத்தை மேலும் சிக்கலாக்குகிறதா என்ற கேள்வியே தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகமாக எழுந்துள்ளது.
ஒருங்கிணைப்பு சஸ்பென்ஸ்
"அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று சசிகலா திரும்பத் திரும்ப கூறிவந்தாலும், யாருடன் பேசுகிறேன், என்ன பேசுகிறேன் என்பதைக் கடைசிவரை ரகசியமாகவே வைத்திருக்கிறார். இந்த 'சஸ்பென்ஸ்' அரசியல்தான், ஒருகாலத்தில் அவரை நம்பி நின்றிருந்த ஒரு சிலரை இப்போது தங்களுக்கான புதிய பாதைகளைத் தேட வைக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சசிகலா தனிமை அரசியல்
சசிகலாவின் அரசியல் நிலை எவ்வளவு தனிமையாக மாறியிருக்கிறது என்பதற்கு, அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அவர் சென்ற நிகழ்வே ஒரு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தப் பயணத்தில், சசிகலாவுடன் அவரது தனிப்பட்ட உதவியாளர் மட்டுமே வந்திருந்தார். வழக்கமாக உடன் இருப்பவர்கள் எங்கே என்ற கேள்விக்கு, "சின்னம்மாவே யாரும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்ற பதிலே அளிக்கப்பட்டது. அதனால் சசிகலா.. அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications