Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிர் மீண்ட கர்ப்பிணி; கண் பார்வை பெற்ற மக்கள் - மலைக்கிராமத்தை மாற்றிய மக்களைத் தேடி மருத்துவம்

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மலை கிராமங்களில் பொதுமக்களுக்கு எப்படி மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது என்பதையே முழுமையாக மாற்றியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 'மக்களைத் தேடி மருத்துவம்' தொடங்கப்பட்டது. இதுவரை ஒரு கோடி பேர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள கிராமம்தான் கடமகுட்டை. இது தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது.

மாற்றம் பெற்ற கடமகுட்டை கிராமம்:

மாற்றம் பெற்ற கடமகுட்டை கிராமம்:

ஏறக்குறைய 150 வீடுகள் உள்ள பகுதி இது. மிக அழகான இயற்கை வளம் நிறைந்த ஊர். சுத்தமான காற்று, சுகாதாரமான சூழல் எனத் திரும்பிய பக்கம் எல்லாம் பசுமை நிறைந்து காட்சியளிக்கிறது.

ஆனால் இந்தக் கிராம மக்கள் தங்களின் மருத்துவ தேவைக்காக வெளியே வந்து செல்வது பெரும் பிரச்சினையாக இருந்துவந்தது. ஆனால், இன்று இந்தக் கிராமத்திலுள்ள வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறது மருத்துவக் குழு.

டாக்டர் ராஜேஷ் குமார், "நான் கெலமங்கலம் வட்டார மருத்துவராக வேலை பார்த்து வருகிறேன். கடமகுட்டை என்ற மலைக்கிராமம். 2017 இல் இந்தக் கிராமத்திற்கு விசிட் செய்தபோது இங்கே பருவத்திற்கு ஏற்ற பயிர்களை மட்டுமே விளைவிக்கப்பட்டு வந்தது.

கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள்தான் விளைந்துவந்தது. வேறு எதுவும் கிடையாது. எந்தப் பொருளை விளைவிக்கிறார்களோ அதையே உணவாக உட்கொள்கிறார்கள். வேறு வகையான உணவுப் பழக்கங்கள் சுத்தமாக இல்லை.

சாலைவசதி கூட இல்லாத கடமகுட்டை:

சாலைவசதி கூட இல்லாத கடமகுட்டை:

மருத்துவம் பார்க்கக் குறைந்தது 4 கி.மீட்டர் பயணித்தால்தான் போக முடியும். அவசர மருத்துவ தேவைக்கு நோயாளியைத் தூளி கட்டிக் கொண்டுதான் போவார்கள். அந்தளவுக்குப் பின் தங்கிய பகுதியாக இருந்தது. மலையடிவாரத்தில் உள்ளவர்கள் தங்களின் தேவையை உடனடியாக அடைய முடியும்.

ஆனால் மலைக்கிராம மக்களுக்கு அனைத்தும் எளிதாகக் கிடைத்துவிடாது. ஒருநாள் மலைக்கிராமத்திலிருந்து பயணித்துப் போனால், அன்றைய ஒரு நாள் முழுக்க நேரத்தைச் செலவிட வேண்டும். இங்கே பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

எனவே இந்த மக்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என நினைத்தோம். முதலில் 3 மாதத்திற்கு ஒருமுறை வர ஆரம்பித்தோம். அந்த இடைவெளி சரியாக வரவில்லை. நாங்கள் வராத காலங்களில் மக்களின் கஷ்டம் குறையவில்லை. ஒரே நிலைதான் நீடித்தது.

ஆகவே வாரத்திற்கு ஒருமுறை வரலாம் என முடிவு செய்தோம். அதிலும் ஒட்டுமொத்த குழுவையும் அடிக்கடி அழைத்துவருவது கஷ்டமாக இருந்தது. அப்புறம் கூடிப் பேசி, மாதம் ஒருமுறை வருவது என முடிவு செய்தோம். அப்போது முதல் தொடர்ந்து வந்து கொண்டுள்ளோம். எங்களுடன் தன்னார்வலர்களும் சுகாதார ஆய்வாளரும் வருகிறார்கள்.

250 பேருக்கு மேல் வாழும் மலைக் கிராமம்:

250 பேருக்கு மேல் வாழும் மலைக் கிராமம்:

இந்தக் கிரமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. ஆகவே கரடுமுரடான மலைப்பாதையில்தான் பயணித்து வருகிறோம். அதுவும் நடந்தேதான் வருகிறோம். அரசின் திட்டங்களை மக்களுக்குச் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதால் சிரமங்களைப் பார்க்காமல் வருகிறோம். சுமார் 250 பேர் இந்த மலையில் வசிக்கிறார்கள்.

அதில், குறைந்தது 100 நபர்களுக்காவது எங்களின் உதவி தேவையாகிறது. ஏனெனில் இது மலைக் கிராமம். அடிக்கடி சளி, காய்ச்சல் வருவதற்கான சீதோஷ்ண நிலை இருக்கும். ஆகவே மருத்துவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். பிபி, சுகர் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சோதனை எனப் பலவற்றை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வழியே செய்து கொடுத்து வருகிறோம்" என்கிறார்.

இந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் யாரும் மருத்துவரைத்தேடி வரத் தேவையில்லை. வீட்டுக்கே சென்று முடியாத நோயாளிக்கு முறையான சிகிச்சையை அளிக்கிறார்கள். மேலும் அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும் வீடு தேடிப் போய் கொடுக்கிறது மருத்துவக் குழு.

இதனால் பல அடிப்படை நோய்கள் தொடக்கத்திலேயே தடுக்கப்படுகின்றன. மேலும் மக்களும் இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆகவே இந்த மலைக்கிராமம் என்று இல்லை. தமிழ்நாடு முழுவதுமே இத்திட்டம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால், இந்தக் கடமகுட்டை கிராமத்தில் கடந்த ஆண்டு ஒருவர்கூட கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்படவே இல்லை. மேலும் இந்த மக்களே தாமாக வந்து முறையாகத் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். எனவே கொரோனா புகாத கிராமம் உலகத்தில் உள்ளதா எனக் கணக்கெடுப்பு ஒன்று செய்யப்பட்டால் அந்தப் பட்டியலில் கட்டாயம் இந்தக் கிராமம் இடம்பிடிக்கும் என்பது உண்மை.

மக்களை நம்ப வைக்கும் போராட்டம்:

மக்களை நம்ப வைக்கும் போராட்டம்:

களப்பணியில் உள்ள செவிலியர் சத்யா பேசுகையில், "நான் இங்கு உள்ள கெலமங்கலம் பஞ்சாயத்தில் வேலை பார்க்கிறேன். கடமகுட்டைக்கு முதன்முதலாக வந்த போது நிறையக் கஷ்டப்பட்டுத்தான் வந்தோம். பாதை சரியில்லை. முறையான தார்ச் சாலை இல்லை. ஆகவே முதலில் கஷ்டமாக இருந்தது.

ஆனால் இப்போது பழகிவிட்டது. பிரச்சினை இல்லை. ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை இந்த மலையில் வைத்தே செய்து வருகிறோம். பெரிய அளவில் சிகிச்சை தேவை எனில் அடிவாரத்தில் உள்ள ஊருக்கு அழைத்துச் சென்று, தருமபுரி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க வைக்கிறோம்" என்கிறார்.

முதலில் இந்தக் கிராமத்திற்குச் சிகிச்சை அளிக்க வந்தபோது மக்கள் யாரும் முன்வரவில்லையாம். ஏனெனில் ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்வதில் அச்சம். நாளடைவில் இந்த அச்சம் மெல்லக் குறைந்துள்ளது. இப்போது அவர்களே ஈடுபாட்டுடன் வந்து சிகிச்சை எடுத்து கொள்வதாகவும் சத்யா கூறுகிறார்.

சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு கர்ப்பிணிக்கு திடீர் பிரசவம் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவக் குழுவை அழைத்துள்ளனர். குழுவும் உரிய ஆம்புலன்ஸ் சேவையுடன் வந்து மலையடிவாரத்தில் காத்திருந்துள்ளது. ஆனால் அழைப்பை விடுத்தவர்கள் வரவில்லை. தொலைப்பேசிக்கான டவர் சிக்னலும் கிடைக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குழு மலைக்கே நடந்தே வந்துள்ளது.

அதேபோல் அந்தக் கர்ப்பிணியின் உறவினர்களும் தூளி கட்டி அவரைத் தூக்கிக் கொண்டு வந்துள்ளனர். இடையில் தேவையான சிகிச்சை அளித்து தருமபுரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். உரிய நேரத்தில் வேகமாகச் செயல்பட்டதால் அந்தத் தாயும் சேயும் நலமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்காக அந்த ஊர்காரர்கள் 'மக்களைத் தேடி மருத்துவக் குழு'வைப் பாராட்டி உள்ளது.

கடமகுட்டை பகுதிவாசி மல்லி இந்த ஊரில் மருத்துவம் என்பது எந்தளவு எட்டாக்கனியாக இருந்தது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்களைத் தேடி மருத்துவம் வந்த பிறகுதான் எங்கள் ஊருக்கும் சில மருத்துவர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதற்காக ஸ்டாலினுக்கு நன்றி என்கிறார். இரவு ஒரு மணிக்கு வந்துதான் என் மகளைக் காப்பாற்றினார்கள் என்று கண்ணீர் மல்கப் பேசுகிறார்.

குறைக்கப்பட்ட மகப்பேறு மரணங்கள்:

குறைக்கப்பட்ட மகப்பேறு மரணங்கள்:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, "சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக மேற்கொண்ட நடவடிக்கைகளால், மகப்பேறுகால மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன் இந்த மாவட்டத்தில் மகப்பேறுகால மரணங்கள் அதிகமாக இருந்தன.

இன்றைக்கு அந்தநிலை இல்லை. இந்த மாவட்டத்தில் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு சுமார் 35 மரணங்கள் என்ற அளவில் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கியதால் கிடைத்த பயன் இது. மேலும் இத்திட்டத்தின் வழியே கால் இல்லாதவர்களுக்குச் செயற்கை கால் வழங்கப்பட்டும் வருகிறது.

இந்த ஊரிலிருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றாலும் கூட 7 கி.மீட்டர் நடந்தேதான் செல்லவேண்டும். அதுவும் வனப்பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். காட்டு விலங்குகளின் அச்சத்தின் நடுவேதான் பயணிக்க வேண்டும். அதை உணர்ந்துதான் இந்த மக்களைத் தேடி மருத்துவத்தை ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டுவந்துள்ளார்.

மேலும் இம்மக்கள் மலைப்பாதையைக் கடந்து பயணிப்பதை அறிந்து, அத்தியாவசிய பொருட்களான நியாயவிலைக்கடையையும் மலைப்பகுதிக்கே மாற்றிக் கொடுத்துள்ளார். ஆகவே அதிக சிரமங்களின்றி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், "இந்த மலைக்கிராமத்திற்கே அமைச்சர் மா.சுப்பிரமணியம் வருகை தந்தார். அதுவும் அந்த மலைக்கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியிலேயே தங்கினார். எந்த அமைச்சரும் அப்படித் தங்கமாட்டார்கள். மறுநாள் காலை அந்தப் பகுதியைச் சுற்றிச் சோதனையிட்டார். அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் சேவை கேட்டார்கள். உடனே செய்தும் கொடுத்தார்.

ஸ்டாலின் செய்து கொடுத்த உதவிகள்:

ஸ்டாலின் செய்து கொடுத்த உதவிகள்:

அந்தக் கிராமம் கடந்த ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. இன்று மாநிலத்தின் சுகாதார அமைச்சரையே முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். அந்தளவுக்குக் கவனம் எடுத்துச் செய்து கொடுத்துள்ளார். ஆகவே அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒரு பையனுக்கு விபத்து நடந்துவிட்டது. அவனுக்குச் செயற்கை கால் பொருத்தித் தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். உடனே அவருக்குச் செயற்கை கால் பொருத்தப்பட்டு விட்டது. அந்தளவுக்கு ஒவ்வொரு தேவையும் கவனித்துச் செய்து கொடுத்துள்ளார்.

இதுவரை இந்த ஊரில் கண் சோதனையே செய்தது இல்லை. முதன்முறையாகக் கண் சோதனையைச் செய்தோம். இப்போது 18 பேருக்குக் கண் கண்ணாடி போட்டுள்ளோம். 4 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அந்தளவுக்கு இக்கிராமம் பலனை அடைந்துள்ளது" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+