ரசிகனின் ரசிகன் மணி.. போலி சாமியார் மகா விஷ்ணு.. இவங்கதான் கெஸ்ட்டா? என்ன ஆச்சு நம்ம பள்ளிகளுக்கு?
சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினர் மகாவிஷ்ணுவின் பேச்சு.. தமிழ்நாடு முழுக்க சர்ச்சையாகி உள்ளது. சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளரை அழைத்து பேசியதுதான் சர்ச்சைகளுக்கு காரணம்.
மூட நம்பிக்கையை தூண்டும் வகையில் பேசியது மட்டுமன்றி.. அரசு பள்ளி ஆசிரியரை அவமானப்படுத்தியதும் கண்டனங்களை சந்தித்து வருகிறது. மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை தமிழ்நாடு முழுக்க மக்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.

என்ன ஆச்சு பள்ளிகளுக்கு?: ஒரு 10- 15 வருடங்களுக்கு முன் பள்ளிகளில் ஆண்டு விழா, சிறப்பு நிகழ்ச்சி என்றால் விருந்தினர்கள் வருவார்கள். அப்போதெல்லாம் முன்னாள் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் வருவார்கள். இல்லையென்றால் எழுத்தாளர்கள் வருவார்கள்.
ரோட்டரி கிளப், ஜேசிஐ கிளப் போன்ற சேவை மைய அமைப்புகளிடம் இருந்து ஆட்கள் வருவார்கள். சரி.. கொஞ்சம் கமர்ஷியலாக கொண்டு வருவோம் என்றால்.. பட்டிமன்ற பேச்சாளர்களை கொண்டு வருவார்கள். அதை தாண்டி கமர்ஷியல் என்றால் நீயா நானா கோபிநாத் வருவார். அவரும் கூட, சினிமா பற்றி எல்லாம் பேசாமல் கல்வி பற்றி பேசுவார். ஏன் சினிமாக்காரர்கள் வந்தால் கூட கல்வி பற்றியே பேசுவார்கள்.
மோசமான நிலைமை: ஆனால் இப்போதெல்லாம் பள்ளி , கல்லூரிகளில் விருந்தினர்கள் என்றால் அது யூ டியூப் பிரபலங்கள். டிக்டாக் முன்னாள் பிரபலங்கள், ரீல்ஸ் பிரபலங்கள், திடீரென இணையத்தில் வைரலாகும் டிரெண்டிங் புள்ளிகள். உதாரணமாக கடந்த சில நாட்களாக பல பள்ளிகளில், கல்லூரிகளில் ரசிகனின் ரசிகன் மணி என்ற நபரை அழைக்கிறார்கள்.
இவர் வந்தாலே.. கல்லூரி பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.. அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறார்கள்.. ஏன் கல்லூரி ஆசிரியர்களே வேறு வழியின்றி மணியை பாதியில் போக சொல்லும் அளவிற்கு இவருக்கு கிரேஸ் உள்ளது. ஆனால் இவர் என்ன செய்தார்? இவர் இவர் மனைவியை பிரிந்து வாழ்க்கிறார்.. பாடல்களுக்கு வாய் அசைத்து ரீல்ஸ் போடுகிறார்.. வேறு என்ன செய்கிறார்.. இவரை கல்லூரியில் அழைத்து பேசும் அளவிற்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதெல்லாம் விட மாணவிகள் இவரை பார்த்து கண்ணீர் விடும் அளவிற்கு என்ன செய்கிறார் .. இவரை எல்லாம் மாணவிகள் எப்படி ஆசிரியரிடம் சொல்லி வர வைக்கின்றனர். எப்படி ஆசிரியர்கள் இவரை வர சொல்ல ஏற்றுக்கொள்கிறார்கள்? என்னங்க நடக்குது இங்கே?
அதிலும் சமீபத்தில் வீடியோ சாட் விவகாரத்தில் சிக்கியவரை பெண்கள் கல்லூரிக்கு எப்படி அனுமதிக்கிறார்கள்? ஆசிரியர்களுக்கு என்ன அச்சு?
தாமு விவகாரம்: இதேபோல் பள்ளிகளில் நடிகர் தாமு பேசுவதற்கு எதிராக கடுமையாக கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் தாமுவின் பேச்சு பிற்போக்குத்தனமாக இருப்பதாக கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். தாமு மீது முக்கியமான சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அவர் பள்ளிகளில் மாணவ, மாணவியரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் விதமாக பேசுகிறார். கடுமையான மன ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். பொதுவாக சுயமுன்னேற்ற பேச்சாளராக பேசும் நபர்கள்.. நம்மிடம் உள்ள குறைகளை களைந்து பாசிட்டிவாக உணர வைக்க வேண்டும்.
தவறு செய்கிறாரா: பேசி முடித்துவிட்டு சென்றால் ஒரு புத்துணர்ச்சி இருக்க வேண்டும். வாழ்க்கை குறித்த நம்பிக்கை இருக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும். ஏற்கனவே படிப்பில் அதிக டென்ஷானாக் உள்ளவர்கள் இன்னும் நன்றாக, அமைதியாக இருக்க வேண்டும். மன அமைதி, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.
ஆனால் சுயமுன்னேற்ற பேச்சாளராக வரும் தாமு மாணவ, மாணவியரை அழ வைக்கிறார். கடுமையான சொற்கள் மூலம் அவர்களை கலங்க வைத்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறார் என்ற புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சமீபத்தில் அவர் பேசினார். இதுவும் கூட கடுமையாக சர்ச்சையானது.
விமர்சனம்: இந்த நிலையில்தான் நடிகர் தாமு மாணவர்கள் மத்தியில் பேசி வருவது குறித்து குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் தாமு அவர்களே குழைந்தைகளை கொடுமைப்படுத்தாதீர்... ஊடகங்களே... இப்படியான வீடியோக்களை வெளியிடாதீர்கள். இவை குழந்தைகளின் உரிமைகளுக்கும், மாண்புக்கும் எதிரானது மற்றும் குழந்தைகளின் சிறந்த நலனுக்கும் எதிரானது. குழந்தைகளை அழவைப்பது என்பது குழந்தைகளை துன்புறுத்தும் செயலாகும். இது சட்டப்படி குற்றமாகும். குழந்தைகளை அறிவுத்தளத்தில் அணுகுங்கள் உணர்ச்சித் தளத்தில் அணுகாதீர், என்று கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
மகாவிஷ்ணு சர்ச்சை: இப்படிப்பட்ட நிலையில்தான் மகாவிஷ்ணு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். இதில்தான் அவர் மூடநம்பிக்கையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். அதோடு அங்கே இருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவரையும் அவமானப்படுத்தி உள்ளார்.
இவரை மேடையிலேயே சங்கர் என்ற ஆசிரியர் ஒருவர் மட்டும் எதிர்த்து பேசிய சம்பவமும் கவனம் பெற்றுள்ளது. சங்கர் என்ற இந்த பார்வையற்ற ஆசிரியரைஅங்கேயே மகா விஷ்ணு கிண்டல் செய்யும் வகையில் அவமானப்படுத்தி உள்ளார்.. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் கொடுத்த ஆசிரியர் சங்கர் தமிழ்நாடு முழுக்க பாராட்டுகளை பெற்று வருகிறார். இன்று ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து மேடையில் அமரவைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புகார்: சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால்தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என அவர் பேசியது எங்களுக்கு எதிரான வன்செயலாக கருதுகிறோம் என்று இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
பணியிட மாற்றம்: பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் என்று அந்த மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்து உள்ளார். உன்னை சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications