தமிழ்நாட்டில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் இன்று முதல் எவ்வளவு லாபம்.. ஜாக்பாட் தானா?
சென்னை: பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1 சதவீத பதிவு கட்டணம் குறைப்பு என்ற தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.இதில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பதிவு கட்டணத்தில் 10000 வரை (10 லட்சம் என்றால்) திரும்ப கிடைக்கும்.. அதேநேரம் இதில் பெண்களுடன் சேர்ந்து ஆண்கள் பெயரும் இருந்தால் அந்த சொத்திற்கு சலுகை பெற முடியாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை செயலர் குமார் ஜெயந்த் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: "சமூகத்தில் மட்டுமின்றி, அவரவர் குடும்பங்களிலும் பெண்களுக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும்.

பட்ஜெட்டில் அறிவிப்பு
தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பால் பயன்பெற இயலும். இதன்மூலம் பெண்களின் சுயசார்பும், பொருளாதார சுதந்திரமும் மேலும் உயரும்' என்று சட்டப்பேரவையில் கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
பெண்கள் பெயரில் சொத்து
விதிமுறைகள், நிபந்தனைகள்: இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், கூட்டாக சேர்ந்து சொத்து வாங்கினாலும், பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் அனைவரும் பெண்களாக இருக்க வேண்டும். இந்த உத்தரவு வெளியாகும் முன்பு பத்திரப் பதிவு தொகை செலுத்தியவர்களுக்கு கட்டணம் திருப்பி தரப்படாது.
நிபந்தனை என்ன
சந்தை மதிப்பின்படி, சம்பந்தப்பட்ட சொத்து ரூ.10 லட்சத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சலுகையை பெறும் வகையில், ஒரே சொத்தை பல பாகங்களாக பிரித்து வாங்க முயற்சிக்க கூடாது. பத்திரப் பதிவுக்கு பிறகு ஆய்வு செய்யும்போது, மதிப்பு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருப்பது தெரியவந்தால், சலுகை வழங்கப்பட்ட தொகையையும் திருப்பி செலுத்த நேரிடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10000 லாபம் கிடைக்கும்
அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் சென்னையை தவிர பிற ஊர்களில் உள்ள பெண்களுக்கு நிச்சயம் லாபம் தான். ஆனால் முற்றிலும் பெண்கள் பெயரில் தான் சொத்து வாங்க வேண்டும்.. ஒரு வீட்டை 10 லட்சத்திற்கு வாங்குவது சாத்தியமில்லை.. எனவே வீட்டை வாங்குவோருக்கு லாபம் கிடைக்காது.. அதேநேரம் 10 லட்சத்திற்குள் சொத்து வாங்குவோருக்கு ஒருசதவீத பதிவுக்கட்டணம் குறைக்கப்பட்டுவதால் 10000 வரை லாபம் கிடைக்கும்.
யாருக்கு லாபம்
அதாவது நிலம், வீட்டு மனை வாங்குவோருக்கு இந்த சலுகை கிடைக்கும். 10000 என்பது 10 லட்சத்தில் வாங்குவோருக்கு தான் கிடைக்கும். 5 லட்சத்திற்கு வாங்கினால் 5000 தான் லாபம் கிடைக்கும். சென்னைக்குள் கிடைக்க வாய்ப்பு இல்லை.. ஏனெனில் சென்னையில் நிலத்தின் மதிப்பும், இடத்தின் மதிப்பும் 10 லட்சத்திற்குள் எங்குமே சாத்தியமில்லை... எனவே சென்னை தவிர மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் இந்த சலுகையால் பயன்பெறுவார்கள்.












Click it and Unblock the Notifications