சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. இன்று முதல் மே 27 வரை எண்ணூரில் ரயில் நிற்காது!
சென்னை: சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் வரும் 27 ம் தேதி வரை 4 நாட்கள் மின்சார ரயில்கள் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் ரயில் சேவை அமலில் உள்ளன. இந்த ரயில் மூலம் தினமும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறைந்த கட்டணத்தில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சென்னை புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் மே 27 ம் தேதி வரை 4 ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் சென்னை சென்ட்ரல் - கூதூர் பிரிவில் அத்திப்பட்டு புதுநகர் மற்றும் எண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் இடையே பராமரிப்பு பணிக்கான என்ஜினியரிங் வேலை நடைபெற உள்ளது. இந்த பணி என்பது இன்று முதல் மே 27 ம் தேதி வரை காலை 9.35 மணிக்கு தொடங்கி மதியம் 12.35 மணி வரை 3 மணிநேரம் நடைபெற உள்ளது.
இந்த பணியின் காரணமாக குறிப்பிட்ட இந்த 3 மணிநேரத்தில் 4 மின்சார ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது. அதன்படி கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இஎம்யூ ரயில் (வண்டி எண்: 42014), சூலூர் பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் சூலூர் பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இஎம்யூ ரயில் (42408) உள்ளிட்டவை இன்று முதல் மே 27ம் தேதி வரை எண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது.
அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு பறப்படும் கும்மிடிப்பூண்டி - சென்னை பீச் இஎம்யூ ரயில் (42604), கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் கம்ப்ளக்ஸ் இஎம்யூ ரயில் (42016) உள்ளிட்ட 4 ரயில்கள் இன்று முதல் 27 ம் தேதி வரை எண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 நாட்களும் சென்னை சென்ட்ரல் - கூதூர் பிரிவில் மேற்கூறிய மின்சார ரயில்கள், விரைவுப்பாதையில் செல்வதால் எண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 4 நாட்களும் பயணிகள் தங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications