அண்ணே டேங்க ஃபுல் பண்ணுங்க..நாளைக்கு கிடைக்குமோ? கிடைக்காதோ? சென்னை பெட்ரோல் பங்குகளில் செம கூட்டம்!
சென்னை: ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் பரவியதால், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் திரளாக குவிந்து வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெட்ரோல் மற்றும் டீசலை முன்கூட்டியே வாங்கி சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்குகளுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும், மக்கள் மத்தியில் பேசப்படும் தகவல்களிலும் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற செய்திகள் பரவி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது.
இதன் விளைவாக பலர் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளுக்கு சென்று எரிபொருள் நிரப்பி வருகின்றனர். சென்னையின் தி நகர், அண்ணாநகர், மாம்பலம், ராயப்பேட்டை உள்ளி ஏரியாக்களில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களிலும் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்படுகிறது.

சில இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகிறது. பொதுமக்கள் பலரும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே பெட்ரோல், டீசல் வாங்கி வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். தினசரி வேலைகள், அலுவலகப் பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே இப்படி முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்று சிலர் கூறுகின்றனர்.
சில வாகன ஓட்டிகள், "எரிபொருள் கிடைக்காமல் போனால் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும். அதனால் முன்னெச்சரிக்கையாக டேங்க் முழுவதும் நிரப்பிக் கொண்டு செல்கிறோம்" என்று தெரிவித்தனர். மக்கள் அதிக அளவில் வருவதால் பல பெட்ரோல் பங்குகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகரித்துள்ளது. வழக்கமாக இருந்ததை விட அதிக வாகனங்கள் வருவதால் தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சில இடங்களில் வாகனங்களின் வரிசை அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிஸியான சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளின் முன்பு வாகனங்கள் திரண்டு நிற்பதால் சிறிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த தகவல்கள் உறுதியானவை அல்ல என்றாலும், வதந்திகள் வேகமாக பரவுவதால் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பலர் எதற்கும் தயாராக இருப்பது நல்லது என்ற எண்ணத்தில் பெட்ரோல் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாமல் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தேவையான அளவில் எரிபொருள் கிடைக்கும் என்ற உறுதியான தகவல்கள் வெளியானால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது சென்னையின் பல பகுதிகளில் பெட்ரோல் பங்குகளுக்கு வாகன ஓட்டிகள் தொடர்ந்து வந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருப்பதால், அங்கு வழக்கத்தை விட அதிகமான கூட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications