பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்..விலை எப்போது குறையும்?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சென்னை: பெட்ரோல், டீசல் தொடர்ந்து 142வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என்று வாகன ஓட்டிகளும் பொது மக்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

மத்திய அரசு குறைப்பு
கடந்த மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அன்றைய தினம் முதல் பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தாலும், இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் அதிகப்படியான பழைய விலைக்கே விற்பனை செய்கிறது.

விலை குறையாத காரணம்
கச்சா எண்ணெய் விலை உயர்த்த போது விலையை மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு தற்போது ஈடு செய்து வருவதாகத் தெரிகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நாம் இந்திய ரூபாய் மதிப்பில் அதிகமாகச் செலவிட வேண்டி உள்ளது. உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

விலை குறையுமா?
பெட்ரோல் டீசல் விலை 142வது நாட்களாக உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை அடிக்கடி உயர்த்தப்படுவது இல்லத்தரசிகளை கவலையடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications