எந்த மாவட்டம் முதலிடம்? 100/100 மார்க் எடுத்தது எத்தனை பேர்? ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின் முழு விபரம்
சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர். ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதி, அவர் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
தேர்ச்சி சதவீதம்: இதில் தேர்ச்சி சதவீதம் 94.56 ஆக உள்ளது. அதாவது 7,19,196 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், மாணவிகள் 96.44 சதவீதம் அதாவது மூன்று லட்சத்து 93 ஆயிரத்து 890 பேரும், மாணவர்களில் 92.37% அதாவது 300,25,35 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட 4.07 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு பொதுத் தேர்வை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது
100% தேர்ச்சி: மொத்தம் 7,532 மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு எழுத வைத்த நிலையில் அதில் 2478 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றிருக்கின்றன. அரசு பள்ளிகளில் 397 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றிருக்கிறது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 91.02 ஆகவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49% ஆகவும், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.70% ஆகவும் உள்ளது.
பிரிவு வாரியாக: அறிவியல் பாடப் பிரிவில் 96.35%, வணிகவியல் பிரிவில் 92.4 சதவீதமும் கலை பிரிவில் 85.67% தொழில் பாட பிரிவுகளில் 85 85 சதவீதமும் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
பாட வாரியாக தேர்ச்சி சதவீதம்: இயற்பியலில் 98.48 சதவீதமும், வேதியலில் 99.14 சதவீதமும், உயிரியலில் 99.95%, கணிதத்தில் 98.57 சதவீதமும், தாவரவியல் 98.86 சதவீதமும், விலங்கியலில் 99.4 சதவீதமும், கணினி அறிவியலில் 99.80 சதவீதமும், வணிகவியலில் 97.07 சதவீதமும், கணக்குப்பதிவியலில் 96.61% பெற்றுள்ளனர்.
100 % மதிப்பெண்: பாட வாரியாக தமிழ் மொழியில் 35 மாணவர்கள், ஆங்கிலத்தில் 7, இயற்பியலில் 633, வேதியல் 471, உயிரியல் 652, கணிதம் 2587, தாவரவியல் 90, விலங்கியல் 382, கணினி அறிவியல் 1996, வணிகவியல் 6142 , கணக்குப்பதிவியல் 1647, பொருளியல் 369, கணினி பயன்பாடுகள் 251, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியல் 210 என மொத்தம் 26,3052 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக: மாவட்ட வாரியாக 97.45 சதவீத தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. 97.42 சதவீத தேர்ச்சி பெற்று சிவகங்கை ஈரோடு மாவட்டங்கள் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து 97.75 சதவீதத்துடன் அரியலூர், 96.97% பெற்று கோவை, 96.44 சதவீத தேர்ச்சி பெற்ற நெல்லை பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications