சில நிமிடத்தில் உரை முடித்த ஆளுநர்.. மேகதாது அணையை பதிலாக தந்த சபாநாயகர் அப்பாவு.. விறுவிறு சட்டசபை
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையை முழுமையாக வாசிக்காமல் சில நிமிடங்களில் முடித்த நிலையில், முழு உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது சபாநாயகர் கூறுகையில், மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கான முழு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழக எல்லையை ஒட்டிய கர்நாடகாவின் மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று சில ஆண்டுகளாக குரல்கள் வலுத்து வருகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மை தலைமையின கர்நாடக பாஜக அரசு, பதவி ஏற்ற உடனேயே காவிரியின் குறுக்கே உபரி நீரை தடுத்து மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசின் நீர்வள ஆணையத்திற்கு அனுப்பியது. இதனை பெற்றுக் கொண்ட மத்திய அரசு அணை கட்டுவது குறித்த காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிட சட்டப்படி வாய்ப்பு இல்லை. எனவே இதனை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தது.
இந்நிலையில் காவரி மேலாண்மை ஆணையம் அதை ஏற்கக்கூடாது நிராகரிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கேரளாவும் மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு அரசும் மேகதாதுவில் அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறது. இதனை ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. அப்போது மேகதாது தொடர்பாக கர்நாடகம் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியதின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்து கருத்துக்களை கேட்கவும், அணை கட்டுவதற்கு ஆதரவான நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பிரதிநிதி சந்திப் சக்சேனா வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என வலியுறுத்திவிட்டு வெளிநடப்பும் செய்தார். அதேநேரம் இந்த விவகாரம் பெரிரய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடகாவை கண்டித்துள்ளதுடன், திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது உரை தொடங்கும் போது தேசிய கீதம் பாட வேண்டும் என்ற மரபு மீறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் குற்றச்சாட்டினார். ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பும், இறுதியிலும் தேசியகீதம் இசைக்க வேண்டுமென பலமுறை கேட்டுக்கொண்டும் அறிவுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது; உரையில் இடம்பெற்றுள்ள பல வாசகங்கள் ஏற்புடையதாக இல்லை என்று உரையை முழுமையாக வாசிக்க மறுத்துவிட்டார் ஆளுநர் ரவி.
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் முடிவடையும்போது தேசிய கீதம் இசைக்கப்படும் இதுதான் இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவை பின்பற்றி வந்த மரபாக உள்ள நிலையில் ஆளுநரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநரின் உரையை வாசித்தார்.
அப்போது "கணியன் பூங்குன்றனார், வரிகளான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்துகிறது; குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது" என சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.
மேலும் சபாநாயகர் அப்பாவு ஆளுர் உரையை கூறுகையில், "அடுத்த ஆண்டில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியான கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீட்டு பிரச்னையில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும். காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கான முழு நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.












Click it and Unblock the Notifications