தமிழக நிதி பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்படுகிறதா.. தமிழக அரசு பொய் சொல்கிறது.. அண்ணாமலை விளக்கம்!
சென்னை: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இதுவரை 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்பது பொய் என்று விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.எஸ்.ஏ கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பாக கடந்த நிதியாண்டில் ரூ.2,121 கோடி நிதி அளித்தது. தற்போது 2024-25ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக ரூ.2,152 கோடி நிதியை ஒதுக்கி இருந்தது. ஆனால் மத்திய அரசின் நிபந்தனையை தமிழக அரசு ஏற்காததால், தமிழ்நாடு கல்விக்கான நிதி மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றி இருக்கிறது. மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்தால் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டுக்கு எதிரான பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையில்லாமல் போய்விட்டது.
புதியக் கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் ரூ.2,152 கோடி பிற மாநிலங்களுக்கு திருப்பிவிட்டு பகிரங்கமாக மத்திய அரசு மிரட்டல் விடுத்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை எந்த அரசும் கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் செய்ததில்லை என்று விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே பிஎம் ஸ்ரீ உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications