அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா!
சென்னை: என்டிஏ கூட்டணியில், பிரதான கட்சிகளுடன் அதிமுக இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்தது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கூட்டணி தலைவர்கள் எம்ஜிஆர் மாளிகைக்கு வந்திருந்தனர். ஆனால், கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் வரவில்லை. தொகுதி பங்கீட்டில் அதிருப்தி இருப்பதால்தான் வாசன் வரவில்லை என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் தொகுதிகளை இறுதி செய்து வருகின்றன.

இன்று அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இதற்காக எம்ஜிஆர் மாளிகைக்கு கூட்டணி தலைவர்கள் வந்திருந்தனர். பிற்பகலில் கூட்டணி ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமக (அன்புமணி தரப்பு) கட்சிக்கு 18 தொகுதிகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், கூட்டணியில் உள்ள மற்றொரு பிரதான கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மட்டுமல்லாது எம்ஜிஆர் மாளிகைக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வரவில்லை. இது கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த முறை ஒரு மாநிலங்களவை எம்பி சீட்+6 சட்டமன்ற தொகுதிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த முறையும் வாசன் இதை எதிர்பார்த்திருந்தார். ஆனால், அதிமுக தரப்பு 4 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்தது. குறைந்தது 5 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டும் என்று வாசன் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கவில்லை. எனவேதான் வாசன் எம்ஜிஆர் மாளிகைக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த தொகுதி பங்கீடு குறித்து பேசியிருந்த, என்டிஏ கூட்டணி தலைவர்கள் திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications